திண்டுக்கல் ஜி.டி.என். கலைக்கல்லூரியில் கல்லூரியின் 61-வது ஆண்டு விழா நிகழ்ச்சி
கல்லூரியில் உள்ள Dr. A.P.J. அப்துல்கலாம் அரங்கில் கொண்டாடப்பட்டது. கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் பொன்னையா
வரவேற்புரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் சு.சரவணன் கல்லூரியின்
ஓராண்டுக் காலச் சாதனைகளை ஆண்டறிக்கையாகச் சமர்ப்பித்தார். கல்லூரியின் செயலர் மற்றும்
தாளாளர் அரிமா டாக்டர் க.ரெத்தினம் கலந்து கொண்டு பேசுகையில்,வெறும் நம்பிக்கையும், விருப்பமும், கனவும்
வெற்றியைத் தந்துவிடாது. ஆனால் இம்மூன்றையும் ஆக்கபூர்வமான விதத்தில் இணைக்கின்ற போது வெற்றி உறுதி, முடியாது என்ற சொல்லை அகராதியில் இருந்து நீக்கிவிட்டு, முடியும் என்பதைத்
தாரக மந்திரமாகக் கொண்டு தானும் முன்னேறி மற்றவர்களையும் முன்னேற்றும் சாறுண்ணியாக
வாழ்ந்தால் வாழ்க்கை வளமாகும். என்றுரைத்து ஜி.டி.என்.கல்விக்குழுமத்தின் வெற்றிக்கு உழைத்திட்ட
அனைவரையும் பாராட்டித் தலைமையுரையாற்றினார். கல்வி இயக்குநர் முனைவர் நா.மார்க்கண்டேயன்
வாழ்த்துரை வழங்கினார். திரையுலகில் பன்முக ஆளுமையாக விளங்கும் நடிகர், இயக்குநர்,
தயாரிப்பாளர், தேசியத் திரைப்பட விருதாளர் சேரன் சிறப்பு விருந்தினராகக்
கலந்து கொண்டு உரையாற்றுகையில், எந்தத்துறையில் வெற்றிபெற வேண்டுமானாலும் மதி நுட்பத்துடன்
திட்டமிட்டு நம்பிக்கையோடு செயல்பட்டால் வெற்றி அடையலாம். ஒரு விதையளவு நம்பிக்கை
இருந்தால் மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்தலாம். முகவரி இருந்தால்தான் குறிப்பிட்ட இடத்திற்குப்
போய்ச்சேர முடியும். குறிக்கோளுடன் இலக்கை நோக்கிப் பயணித்தால் வெற்றி தேடி வரும். கடந்து
வந்த பாதைகளைத் திரும்பிப் பார்த்துக் கவனத்துடன் செயல்படுபவனால் மட்டுமே சோதனைகளைத்
தாண்டி சாதனைகளை நிகழ்த்த இயலும். தங்களை உருக்கிக் கொண்டு உங்களை உருவாக்கும்
பெற்றோர்களுக்கு உங்கள் வெற்றிகளைச் சமர்ப்பணமாக்குங்கள் என்று கூறி மாணவர்களை எழுச்சி
பெறச் செய்தார்.
இயக்குநர் முனைவர் ரெ.துரை, சட்டக்கல்லூரியின் செயலர், வழக்கறிஞர், திண்டுக்கல் மாமன்ற உறுப்பினர் கே.கே.ஆர்.வெங்கடேஷ், பதிவாளர் பி.சின்னக்காளை, ஆலோசகர் முனைவர் எஸ்.இராமசாமி, பாராமெடிக்கல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் மனோகரன், இயற்கை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் தீபா, செவிலியர் கல்லூரியின் முதல்வர் வசந்தாமணி, சட்டக்கல்லூரியின் முதல்வர் முனைவர் ஸ்ரீனிவாசன், நிதி ஆலோசகர் முனைவர் சிவராஜன், ஃபார்மஸி கல்லூரியின் முதல்வர் முனைவர் டீன் குமார், ஜி.டி.என். கல்விக் குழுமத்தின் உதயமாகவிருக்கும் பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் ரவிச்சந்திரன், ஆட்சிக்குழு உறுப்பினர் பேராசிரியர் மதிவாணன் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தனர். மதிப்பெண்களில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கும், நூறு சதவிகிதம் வருகைப் பதிவு உள்ள மாணவர்களுக்கும், பல்வேறு நிலைகளில் சாதனை புரிந்த மாணவர்களுக்கும் கல்லூரியின் வளர்ச்சிக்காக ஆராய்ச்சி மற்றும் இதர துறைகளில் தங்களது பங்களிப்பை நல்கிய பேராசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. சுய உதவிப் பிரிவின் துணை முதல்வர் முனைவர் உ.நடராஜன் நன்றி நவில நாட்டுப்பண்ணுடன் ஆண்டுவிழா இனிதே நிறைவுற்றது. விழாவில் ஜி.டி.என். கல்விக் குழுமத்தைச் சேர்ந்த 4000 மாணவர்களும், கல்விக் குழமத்தின் இருபால் பேராசிரியர்களும், பெற்றோர்களும், நகரின் முக்கியப் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
பிற்பகல் கல்லூரியின் கலாச்சார நாள் விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவிற்குத் திரைப்பட நடிகர் திரு. பரத் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவர் “உங்களுக்குள் அநேகத் திறன்கள் காத்திருக்கின்றன. அவற்றைக் கண்டு கொள்ளுங்கள், கருத்தாய் வளர்த்திடுங்கள், திறமையைக் கொண்டு பல உன்னதங்களை நாம்தான் நிகழ்த்த முடியும்” என்று மாணவர்களிடத்து எடுத்துக்கூறி உரையாற்றினார். சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்பதற்கேற்பப் பல்கலை வித்தகர்களான ஜி.டி.என். கல்விக்குழுமக் கலைத் திறனாளர்கள் சங்கமிக்கும் இந்நிகழ்வில் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். மாணவர்கள் உற்சாக வெள்ளத்தில் அனைத்தையும் கண்டு ரசித்தனர்.



