நாகர்கோவில் ஆக 18
தடிக்காரன்கோணம் – வாழையத்துவயலில் நேரு யுவகேந்திரா இளைஞர் மன்றம் மற்றும் வி.வி.எல் லக்கி ஸ்டார் சார்பில் மாநில அளவிலான 3-ம் ஆண்டு மின்னொளி கைப்பந்துப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியினை முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான திரு. என்.தளவாய்சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியினை தொடங்கி வைத்தார்.
கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி, தோவாளை ஒன்றியத்திற்குட்பட்ட தடிக்காரன்கோணம் – வாழையத்து வயலில் நேரு யுவகேந்திரா இளைஞர் மன்றம் மற்றும் வி.வி.எல் லக்கி ஸ்டார் சார்பில் மாநில அளவிலான 3-ம் ஆண்டு மின்னொளி கைப்பந்துப் போட்டி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இப்போட்டிகளில் திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர், பணகுடி, நாங்குநேரி, இராதாபுரம் போன்ற பகுதிகளிலிருந்தும், குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கேரள மாநிலத்திலிருந்தும் மொத்தம் 32 அணிகள் கைப்பந்து போட்டிகளில் பங்கேற்கின்றன. 2-ம் நாள் போட்டியில் வாழையத்துவயல் வி.வி.எல் லக்கி ஸ்டார் அணியும், பூதப்பாண்டி யூனிட்டி பிரண்ட்ஸ் அணியும் விளையாடிய போட்டியினை முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இவ்விழாவில் அவர் பேசும் போது தெரிவித்ததாவது,
இவ்விழாவில் கலந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு விளையாட்டு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இளைஞர்கள் இளம் பருவத்தில் கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பது போன்று தங்கள் விரும்பும் விளையாட்டுகளில் முறையாக பயிற்சி எடுத்து சிறந்த முறையில் விளையாடி வீட்டுக்கும், தமிழ் மண்ணுக்கும், இந்திய நாட்டுக்கும் பெருமையினை தேடி தர வேண்டும். உழைப்பும், முயற்சியும், பயிற்சியும் இருந்தால் சாதிக்க முடியும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் விளையாட்டு திறனை வளர்ப்பதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு நாடும் விளையாட்டுத்துறையின் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்கும், விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்க்கும் தேவையான நிதி ஒதுக்கீடுகளை வழங்கி விளையாட்டு துறையை வளர்ச்சி அடைய செய்து வருகிறது. விளையாட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து எந்த விளையாட்டில் ஈடுபடுகிறோமோ அதில் முறையாக கவனம் செலுத்தி, பயிற்சி எடுத்து வெற்றியை இலக்காகக் கொண்டு மாவட்ட அளவிலும், மாநில அளவிலும், இந்திய அளவிலும் விளையாடி வெற்றி பெற வேண்டும். ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கின்ற வகையில் விளையாட்டு திறனை இளைஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் நேரு யுவகேந்திரா இளைஞர் மன்ற தலைவர் விமல்ராஜ், செயலாளர் ராஜன், பொருளாளர் சுரேஷ், கழக நிர்வாகிகள் ராணி, பொன்சுந்தர்நாத், மேரிஜாய், அஜன், வின்சென்ட், சந்திரசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



