நாகர்கோவில் பிப் 20
நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்துவ கல்லூரியில் இருந்து கேரளா மாநிலம் மூணாருக்கு கல்வி சுற்றுலா சென்ற பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 3 மாணவர்களின் மறைவிற்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்த மாணவர்களின் உடல்நிலை குறித்து தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி கணினி அறிவியல் பிரிவை சேர்ந்த 39 மாணவர்கள் கேரளா மாநிலம் மூணாருக்கு கல்வி சுற்றுலா சென்ற போது ஏற்பட்ட விபத்து குறித்து அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். சம்பவ இடத்தில் 2 மாணவிகளும், தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் 1 மாணவரும் உயிரிழந்தார்கள் என்ற செய்தி மனதை உலுக்கியது. அவர்களின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவர்கள் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரின் துக்கத்தில் நானும் பங்கு எடுத்து கொள்கிறேன்
சம்பவம் குறித்து அறிந்த உடன் கேரளா மாநிலம் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா மூலமாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் AK மணி அவர்களையும், மூணார் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ராஜா அவர்களையும் தொடர்பு கொண்டு காயமடைந்தவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்திட கேட்டுக்கொண்டேன். அங்குள்ள அரசு மருத்துவமனை மருத்துவர்களை தொடர்பு கொண்டு அங்கு சிகிச்சை பெற்று வரும் மாணவர்களின் நலன் குறித்து விசாரித்தேன்.
பலத்த காயமடைந்த மாணவர்களை தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றதை தொடர்ந்து தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் அவர்களை தொடர்பு கொண்டு செய்யவேண்டிய உதவிகள் செய்ய கேட்டுக்கொண்டேன். மருத்துவமனை உயர் மருத்துவர்களிடமும் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க கேட்டுக்கொண்டுள்ளேன். மேலும் தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், வசந்த் அண்ட் கோ ஊழியர்கள் ஆகியோர் தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்று தேவையான அனைத்து உதவிகளும் செய்ய தயார் நிலையில் உள்ளனர். ஸ்காட் கிறிஸ்துவ கல்லூரி தாளாளர் அவர்களையும் தொடர்பு கொண்டு தேவையான அனைத்து உதவிகளும் செய்ய உறுதி அளித்துள்ளேன். காயமடைந்த மாணவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன்.