நாகர்கோவில், நவ. 12 –
தமிழ்நாடு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் நேற்று காலை நாகர்கோவில் வந்தார். அவரை அரசு விருந்தினர் மாளிகையில் குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மேயர் மகேஷ் தலைமையில் திமுகவினர் வரவேற்றனர்.
பின்னர் அமைச்சர் கூறியதாவது: சமூக நலத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட எல்லா திட்டங்களுக்கும் நடைமுறைக்கு கொண்டு வரபட்டுவிட்டது. அன்புக்கரங்கள் திட்டத்தில் இன்னும் மக்கள் விண்ணப்பிக்கலாம். எத்தனை விண்ணப்பம் வந்தாலும் கொடுக்க முதலமைச்சர் அனுமதி அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பெண்கள் நடமாட முடியாமல் உள்ளனர் என பொய்யான குற்றச்சாட்டை எதிர்க்கட்சியினர் முன்வைக்கின்றனர். உண்மை அது அல்ல. இந்தியாவில் பாதுகாப்பான நகரம் சென்னை, கோயம்புத்தூர் தான் என மத்திய அரசின் புள்ளி விபரம் கூறுகிறது.
பாலியல் குற்றத்திற்கு உள்ளாக கூடிய பெண்கள் திமுக ஆட்சியில் தைரியமாக புகார் அளிக்க முன் வருகிறார்கள். அரசு சார்பில் விழிப்புணர்வு வழங்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் எதையும் பாராட்ட மாட்டார்கள். ஆளுங்கட்சியை குறை கூற வாய்ப்பு கிடைக்காதா என்ற நோக்கில் குற்றம் சொல்கின்றனர். பெண்கள் பாலியல் துன்புறுத்தல் மீது புகார் கூறாமல் இருந்த நிலை மாறி தற்போது தாமாக முன்வந்து புகார் அளிக்கும் நிலையில் பெண்களின் நிலை இன்று உயர்ந்திருக்கிறது.
திராவிட மாடல் ஆட்சியில் பாலியல் குற்றச்சாட்டை மட்டும் தான் கூற முடியும் என்பதால் எதிர்க்கட்சிகள் கூறுகிறார்கள். பாலியல் குற்றங்களுக்கு எதிராக அதிக புகார்கள் வந்தாலும் சமூக நலத்துறை அதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறது. பாலியல் குற்றங்களுக்கு எதிராக புகார் தரும் பெண்களை நாங்கள் மனமாற பாராட்டுகிறோம். அதற்கான விழிப்புணர்வை செய்து வெற்றி பெற்றுள்ளோம் என கூறினார். முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் உட்பட பலர் உடனிருந்தனர்.



