மயிலாடுதுறை பிப்.7
ஜேசிபி டிரைவரை கத்தியால் குத்திய வழக்கில் மயிலாடுதுறை சார்பு நீதிமன்றத்தில் 3 பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை:-
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தோப்புத்தெருவை சேர்ந்தவர் நடராஜன் மகன் தினேஷ். ஜேசிபி ஓட்டுனரான தினேஷ் 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28-ஆம் தேதி குத்தாலத்தில் ஜேசிபியில் சென்றபோது, எதிர்திசையில் ஒரே பைக்கில் வந்த அதே பகுதியை சேர்ந்த சரவணன்(27), ஆபேல்(25), ஜெயவீரன்(25) ஆகிய மூவர்; மதுபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து, குத்தாலம் காவல் நிலையத்தில் தினேஷ் புகாரளித்தார். புகாரை வாபஸ் வாங்கச்சொல்லி மூன்று பேரும் அன்றிரவு தினேஷிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு தினேஷ் உடன்படாததால் ஆத்திரமடைந்த அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் தினேஷை குத்தினர். இதுகுறித்து தினேஷின் தந்தை நடராஜன்(51) குத்தாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கொலை முயற்சி வழக்குப் பதிந்த போலீஸார் மூவரையும் கைது செய்தனர். மயிலாடுதுறை சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த இவ்வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தினேஷை கத்தியால் குத்திய மூவருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.1000 அபராதம் விதித்து, கூடுதல் சார்பு நீதிபதி பி.கவிதா தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் சிவதாஸ் ஆஜரானார்.