சென்னை, மே 5 –
பிராமல் ஃபைனான்ஸ், 2026 நிதியாண்டில் வரிக்குப் பிந்தைய லாபம், கடந்த ஆண்டை விட 210% அதிகரித்து ₹1,506 கோடியாக உயர்ந்திருக்கிறது. மார்ச் மாதத்தில் முடிவடைந்த காலாண்டில் லாபம் ரூ.502 கோடியாக மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட 390 சதவீதம் அதிகமாகும்.
இந்த ஆண்டில் இந்நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் சொத்துக்களின் மதிப்பு 25% உயர்ந்து ரூ.1,01,230 கோடியை எட்டியிருப்பது ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது. இந்த வளர்ச்சிக்கு மொத்த 85 சதவீத பங்களிப்பை வழங்கிய சில்லறை வர்த்தகமே முக்கிய காரணமாக அமைந்தது. மேலும், பெரும்பாலும் கிராமப்புறங்களை மையமாகக் கொண்டு 170 புதிய கிளைகள் திறக்க திட்டமிட்டுள்ளது.
சிறப்பான செயல்பாடு குறித்து நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஜெயராம் ஸ்ரீதரன் கூறுகையில், 2026 நிதியாண்டு பிராமல் ஃபைனான்ஸ் நிறுவனத்திற்கு ஒரு திருப்புமுனையாக இருந்திருக்கிறது. வலுவான வளர்ச்சி, சில்லறை (ரீடெய்ல்) வர்த்தகப் பிரிவில் அதிக கவனம் மற்றும் ஆழமான தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு ஆகியவை இதில் அடங்கும்.
நாடு முழுவதும் எமது சேவைகள் விரிவடையும் போது, வாடிக்கையாளர் அனுபவம், கடன் மதிப்பீடு, வசூல் மற்றும் ஒட்டுமொத்த உற்பத்தித்திறனை மேம்படுத்துவதில் செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கும் என்றார்.



