நாகர்கோவில், ஏப். 20 –
நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் எம் ஆர் காந்தி எம்எல்ஏ தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். வாக்காளர்களை நேரில் சந்தித்து தாமரை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து வருகிறார். அவர் செல்லும் இடம் எல்லாம் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். கூட்டணி கட்சியினருடன் இணைந்து ஆதரவு திரட்டி வரும் எம்ஆர் காந்திக்கு பல்வேறு இடங்களில் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.
தொடர்ந்து அவர் பிரச்சாரத்தில் பேசியதாவது: நாகர்கோவில் தொகுதியில் தொடர்ச்சியாக வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த அனைவரும் தாமரை சின்னத்தில் வாக்களித்து மீண்டும் என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும். தொகுதிக்குட்பட்ட நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இளைஞர்களுக்கு போதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் நாகர்கோவில் பகுதியில் புதிய தொழிற்பேட்டைகள் கொண்டுவரப்படும். நாகர்கோவில் மாநகரப் பகுதியில் தடை இன்றி தூய்மையான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது நகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள தெங்கம்புதூர், ஆளுர் போன்ற பகுதிகளுக்கு 24 மணி நேரமும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அரசு பஸ்களில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இலவச பயணம், மகளிர் உரிமைத்தொகை மற்றும் ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்கள் உள்ளிட்ட உன்னத திட்டங்களை செயல்படுத்தப்படும். இத்திட்டங்கள் உங்களை வந்தடைய தாமரை சின்னத்திற்கு வாக்களியுங்கள்.
தமிழகத்தில் தற்போதைய திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். மக்கள் விரோத ஆட்சியை அப்புறப்படுத்த எனக்கு வாக்கு அளியுங்கள் என அவர் பேசினார்.



