ஈரோடு அக் 19
தமிழ்நாடு அரசின் குறு சிறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி (தாய்கோ வங்கி)கிளைகளில் குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு மிக குறைந்த வட்டியில் (7 சதவீதம்) ரூ.20 லட்சம் வரை புதிய திட்டமான “கலைஞர் கடன் உதவி” திட்டத்தின் கீழ் நடைமுறை மற்றும் மூலதன கடன்கள் வழங்க அரசு அனுமதி அளித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் குறு உற்பத்தி நிறுவனங்கள் அசையா சொத்துக்களை அடமானம் வைத்து இந்த கடன்களைப் பெறலாம். இத்திட்டத்தில் கடன் பெற குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சமாக 65 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் புதிய மற்றும் ஏற்கனவே இயங்கி வரும் குறு உற்பத்தி தொழில் நிறுவனங்கள் பயன்பெறலாம். மேலும், உரிமையாளர்கள், பங்குதாரர்கள், தனியார் நிறுவனங்கள், தொழிற் கூட்டுறவு அமைப்புகள் சார்ந்த குறு உற்பத்தி தொழில் நிறுவனங்கள் பயன்பெறலாம்.
இத்திட்டத்தில், ஏற்கனவே தொழில் செய்து கொண்டு இருப்பவர்கள், பிற நிறுவனங்களில் அதிக வட்டிக்கு பெற்ற கடன்களை விதி முறைகளுக்கு உட்பட்டு குறைந்த வட்டிக்கு மாற்றிக் கொள்ளலாம்.
ஈரோடு மாவட்டத்தில் சந்தை வாய்ப்புள்ள குறு உற்பத்தி தொழில் நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.
ஜவுளி மற்றும் ஜவுளி சார்ந்த தொழில்கள்
விவசாயம் சார்ந்த தொழில்கள், உணவுப் பொருட்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் சார்ந்த தொழில்கள்
மின் உற்பத்தி மற்றும் உதிரி பாகங்கள் உற்பத்தி தொழில்கள் கட்டுமான பொருட்கள் உற்பத்தி சார்ந்த தொழில்கள்
தேங்காய் நார் மற்றும் தொடர்புடைய தொழில்கள்
பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி சார்ந்த தொழில்கள்.
ஈரோடு மாவட்டத்தை சார்ந்த ஆர்வமுள்ள தொழில் உற்பத்தி நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், தகவல்களுக்கு கிளை மேலாளர்தாய்கோ வங்கி, பெருந்துறை ரோடு, ஈரோடு மற்றும் பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம் சென்னிமலை ரோடு, என்ற முகவரிக்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கர தெரிவித்துள்ளார்.