பரமக்குடி, மே. 16:
பரமக்குடியில் சித்திரை திருவிழா நிகழ்ச்சிக்காக வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள ராட்டினம் அருந்து விழுந்ததில் இரண்டு சிறுவர்கள் காயமடைந்தனர்.
பரமக்குடி வைகை ஆற்றில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ராட்டினங்கள் அமைக்கப்படுவது வழக்கம்.இந்த நிலையில் கடந்த ஆண்டு சித்திரை திருவிழாவில் வைகை ஆற்றுக்குள் ராட்டினம் அமைப்பது பாதுகாப்பானது அல்ல என ராட்டினம் அமைப்பதற்கு நீதிமன்றம் தடை விதித்தது.
இந்த நிலையில், இந்த வருடம் சித்திரை திருவிழாவில் ராட்டினம் வைகை ஆற்றில் அமைப்பதற்காக உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் ராட்டினம் அமைப்பாளர்கள் வழக்கு தொடர்ந்தனர்.அதிகாரிகள் வைகை ஆற்றில் ராட்டினம் அமைப்பதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், நீதிமன்றம் முறையான பாதுகாப்புகளுடன் ராட்டினத்தை இயக்க வேண்டும் என அனுமதி அளித்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை, மழையுடன் கூடிய காற்று வீசியது. அதனையும் பொருட்படுத்தாமல்,ராட்டினம் இயக்கப்பட்டதால் சிறுவர்கள் சுற்றக்கூடிய ராட்டினம் அருந்து விழுந்தது.
இதில் பரமக்குடி முத்தாலம்மன் கோவில் படித்துறையைச் சேர்ந்த பாண்டி என்பவரின் மகன்கள் டார்வின் (4), மருது 10) இரண்டு சிறுவர்கள் காயமடைந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக இரண்டு சிறுவர்களும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.



