கிருஷ்ணகிரி, ஜூலை 8 –
கிருஷ்ணகிரி வட்ட வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் மேல் புதூர் கூட்டுறவு நியாய விலை கடைக்கான புதிய நிரந்தர கட்டிடத்தை இன்று கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் முகுந்தன் பாண்டியன் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். புதிய நியாய விலை கடை திறந்து வைத்த பின் குத்துவிளக்கேற்றி விற்பனையை கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்.
ரூபாய் 12.67 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட இந்த நியாய விலை கடையில் சுமார் 656 குடும்ப அட்டைதாரர்கள் பயனடையவார்கள் என கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் முகுந்தன் பாண்டியன் கூறினார். பின்னர் பொதுமக்களிடம் பேசும் பொழுது: இந்த புதிய நியாய விலை கடையில் பொதுமக்கள் அரிசி பருப்பு சர்க்கரை எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தரமாகவும், எடை அளவு சரியாகவும், பொறுப்புணர்வுடன் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும், இதில் ஏதாவது குறை இருப்பின் உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலரை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் பேசினார்.
கிருஷ்ணகிரி மேல் புதூரில் நடைபெற்ற புதிய நியாய விலை கடை திறப்பு விழா நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட பொதுவிநியோகத் திட்ட துணைப்பதிவாளர் சிவகுருநாதன், கிருஷ்ணகிரி வட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனையாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.சரவணன், கூட்டுறவு சார்பதிவாளர் சாந்தா, விற்பனையாளர்கள் சசிகுமார், மதுனிகா உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர். இறுதியாக பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.



