நாகர்கோவில், ஏப். 27 –
கன்னியாகுமரி மாவட்டம் செம்பொன்விளை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப் பள்ளியில் படித்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆசிரியர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர், என பல துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த 1926 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அரசு பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இன்று வரை தொடர்ந்து தொடக்க கல்வி பயின்று வரும் நிலையில் தற்போது 100 ஆண்டுகளை எட்டி நூற்றாண்டை கொண்டாடுகிறது.
நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த பள்ளியில் 60 ஆண்டுகளுக்கு முன் பயின்ற முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து பள்ளிக்கு தேவையான பெஞ்ச், டெஸ்க், பீரோ, கம்ப்யூட்டர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை சீர் வரிசையாக இரண்டு டெம்போ வேனில் ஏற்றி தனது குடும்பத்தினருடன் ஊர்வலமாக பள்ளிக்கு கொண்டு வந்து கொடுத்ததோடு அந்த பள்ளியில் பணியாற்றி தங்களுக்கு கல்வி கற்று தந்து ஓய்வு பெற்ற 90 வயதான மூத்த ஆசிரியர் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று கொண்டனர்.
தொடர்ந்து அந்த பள்ளியில் 70 ஆண்டுகளுக்கு முன் பயின்ற முன்னாள் மாணவர்களையும் வரவழைத்து பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர். தங்களுடன் படித்த நண்பர்களுடன் தங்கள் குடும்பத்தோடு உரையாடி மகிழ்ந்ததோடு தங்கள் பேரக்குழந்தைகளை வைத்தே விழிப்புணர்வு நாடகங்கள், கலை நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்ந்தனர்.



