வேலூர், செப். 25 –
வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் 26-ம் தேதி தொடங்கும் கிராவிடாஸ் 2025 அறிவுசார் நிகழ்வில் 207 நிகழ்வுகளும், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர் என விஐடி வேந்தர் கோ. விசுவநாதன் தெரிவித்தார்.
வேலூர் விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் வேந்தர் கோ. விசுவநாதன் கூறுகையில்: வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் 16-வது ஆண்டாக கிராவிடாஸ் 2025 அறிவுசார் விழா செப்டம்பர் 26 – 28 வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
இந்த நிகழ்வு மாணவர்களின் புதுமை மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் தளமாக இருந்து வருகிறது. இவ்வாண்டு கிராவிடாஸ் அறிவுசார் விழாவில் 207 நிகழ்வுகள் நடைபெறுகின்றன. 60-க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் முன்கூட்டியே நடந்துள்ளன. மீதமுள்ள 147 நிகழ்வுகள் கிராவிடாஸ் விழாவில் நடைபெறும். மேலும் 84 புதிய நிகழ்வுகள் இணைக்கப்பட்டுள்ளன. இதில் 51 ஹேக்கத்தான், 57 பயிற்சி பட்டறைகள், 24 தொழில்நுட்ப போட்டிகள், 75 புதுமையான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அடங்கும். ரோபோ வார், ட்ரோன் ஷோ, கோ கார்ட்டிங் மற்றும் ஏரோகிராப்டர்ஸ், குவாட்காப்டர், கோட் 2 கிரியேட் ஆகிய சிறப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கிராவிடாஸ் நிகழ்வில் சுமார் 40 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பங்கேற்க உள்ளனர். மகாராஷ்டிரம், கர்நாடகம், மேற்குவங்கம், டெல்லி, தெலங்கானா மற்றும் ஆந்திரபிரேதசம் ஆகிய மாநிலங்களில் இருந்து 450-க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். சுமார் 3000-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இருந்தும், 300-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்தும் கிராவிடாஸ் நிகழ்வில் மாணவ, மாணவிகள் பங்கேற்க உள்ளனர். வெளிநாடுகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்கின்றனர்.
கிராவிடாஸ் விழாவில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகள், ஹேக்கதானில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு சுமார் ரூ.30 லட்சம் அளவுக்கு ரொக்கப் பரிசு, கல்வி பயிற்சிக்கான பரிசு கூப்பன்கள் வழங்கப்பட உள்ளன. மேலும் ஹேக்கதான் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு நேர்முகத்தேர்வு மற்றும் இன்டர்ன்ஷிப் பயிற்சி ஆகியவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்டார்ட் அப் தொழில்முனைவோர்களுக்கு தனியாக “கேப்பிடல் ஹன்ட்” என்ற நிகழ்வு நடைபெறுகிறது.
கிராவிடாஸ் தொடக்க நிகழ்வில் அபுதாபி நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் மஜித் அலி அல் மன்சூரி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். கவுரவ விருந்தினர்களாக நியூஸ் 18 நிர்வாக ஆசிரியர் ஆனந்த் நரசிம்மன், மேக்ஸிமஸ் இந்தியா நிறுவனத்தின் பிரவீனா பீமவாரப்பு ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
செப்டம்பர் 28-ம் தேதி நடைபெறும் நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக கர்நாடக மாநில எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் சரத்குமார் பச்சே கவுடா, கவுரவ விருந்தினராக நிதி ஆயோக் இயக்குநர் ஷஷாங் ஷா ஆகியோர் பங்கேற்கின்றனர் என்று கூறினார்.
பின்னர் கிராவிடாஸ் 2025 நிகழ்வின் ஜெர்சியை வேந்தர் கோ.விசுவநாதன் அறிமுகம் செய்து வைத்தார். விஐடி செயல் இயக்குநர் சந்தியா பென்டாரெட்டி, ரமணி பாலசுந்தரம், துணைவேந்தர் காஞ்சனா பாஸ்கரன், இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக், கிராவிடாஸ் ஒருங்கிணைப்பாளர் ஷர்மிளா ஆகியோர் உடனிருந்தனர்.



