திருப்பத்தூர் :மார்ச்:19, திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பையனப்பள்ளியில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் கழிவுநீர் கால்வாய் பணியினை செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ளதாக பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்தத் திட்டத்தினை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என ஊர் பொதுமக்கள் மனு அளித்தனர்.
ஜோலார்பேட்டை ஒன்றியம் வெலக்கல்நத்தம் ஊராட்சிக்குட்பட்ட பைனப்பள்ளி கிராமத்தில் 70-க்கும் மேற்பட்ட பட்டியல் இன மக்கள் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் நீண்ட காலமாக கழிவுநீர் கால்வாய் திறந்தவெளியில் உள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாக ஆளாகின்றனர். மேலும் அந்த கழிவு நீரால் நோய் தோற்றும் அபாயம் ஏற்படுவதோடு, கொசுக்கள் மொய்க்கின்றது. மாலை நேரங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வெளியில் நடமாட முடியாத அளவில் துர்நாற்றம் வீசுகிறது. இந்நிலையில் அப்பகுதிக்கு கழிவு நீர் கால்வாய் திட்டப் பணியினை செய்வதாக அறிவித்த நிலையில் இதுவரையில் திட்டப்பணிகளை மேற்கொள்ளப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.
சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் விரைவில் இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் திட்டப் பணியினை மேற்கொள்வதாக குறிப்பிட்டு இருந்தனர். ஆனால் திட்டப் பணிகளை ஊராட்சி நிர்வாகத்தின் சார்பிலும், சம்பந்தப்பட்ட அலுவலரும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ஊராட்சி மன்ற தலைவர் இடத்தில் பலமுறை கூறியும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும், கடந்த குடியரசு தின கிராமசபா கூட்டத்தில் முறையாக கேள்வி எழுப்பிய போது விரைவில் கால்வாய் திட்ட பணிகளை செய்து தருவதாக உறுதியளித்தனர். எனினும் பல மாதங்களாக எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று நம் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. வாராந்திர திங்கள் தின நாளில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்டோர் மனுவினை அளித்தனர்.



