விழுப்புரம், ஆகஸ்ட் 20 –
விழுப்புரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் பல எண்ணற்ற திட்டங்களை அறிவித்து சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார்கள். அதன் அடிப்படையில் தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், ஊட்டச்சத்து மேலாண்மை நுண்ணூட்டச் சத்துக்கள், உயிர் உரங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், ஊடுப்பயிர் மேற்கொள்பவர்களுக்கு 50 சதவீதம் மானியம் குறித்தும், ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டம், நெல் விதை விநியோகம், திணை, கம்பு, சோளம் உள்ளிட்ட சிறுதானியங்கள் உற்பத்திகள் குறித்தும், விவசாயிகளுக்கு நேரடி மானியம் ஊக்கத்தொகை வழங்குவது குறித்தும், விவசாயிகளுக்கு வேளாண் பொறியியல் துறை மூலமாக வேளாண் இயந்திர பொருட்கள் வழங்குவது குறித்தும் கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மாநில அரசின் திட்டங்களான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம், டெல்டா அல்லாத மாவட்டங்களுக்கான குறுவை சிறப்புத் திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டம் (நெல்), மானாவாரி பகுதி மேம்பாட்டு ஒருங்கிணைந்த பண்ணையம், தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம் (பயறு வகைகள் மற்றும் சிறுதானியங்கள்) குறித்தும், விவசாயிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் பணிகள் குறித்தும், டிஜிட்டல் முறையில் பயிர் கணக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கடந்த ஆண்டில் வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அரசு நலத்திட்ட உதவிகள், வேளாண் பயிர்களுக்கான இழப்பீடுகள் மற்றும் பயிர் காப்பீடு உள்ளிட்டவைகள் குறித்தும் துறை சார்ந்த அலுவலர்களிடம் விரிவாக கேட்டறியப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார். இக்கூட்டத்தில் வேளாண் இணை இயக்குநர் சீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) பிரேமலதா, துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) சுமதி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



