திருவெண்ணெய்நல்லூர், ஆக. 12 –
சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள கோபால் நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் தாயுமானவர் திட்டத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையொட்டி விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே சித்தலிங்கமடம் கிராமத்தில் தாயுமானவர் திட்டம் துவக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன் கௌதம சிகாமணி, ஆர்.டி.ஓ. அரிதாஸ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் விஜயசக்தி மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகர், ஒன்றிய சேர்மன் ஓம்சிவசக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கவுன்சிலர் பி.வி.ஆர். விசுவநாதன் அனைவரையும் வரவேற்றார்.
விழாவில் முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு வாகனங்கள் மூலம் வீடு தேடிச் சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் தாயுமானவர் திட்டத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் அந்த கிராமத்தில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை வழங்கினார். இதில் தயா. இளந்திரையன், மோகன், சடகோபன், சுதா சீனுவாசன், ஏழுமலை, காசி விஸ்வநாதன், துரை சதீஷ்குமார், கெங்கையம்மாள், கிருஷ்ணராஜ், நிர்மல்ராஜ், வெங்கடேசன், குமரவேல், குரு ஜெயபிரகாஷ், ராதா, ரவி, அஸ்வத்தாமன், ரவி, முருகேசன், ஏழுமலை பிரபாகரன், நவீன்குமார், தல. சித்தார்த், பாலாஜி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.



