இரணியல், ஆக. 26 –
வில்லுக்குறி அடுத்த திருவிடைக்கோடு பகுதியில் உள்ள 9-வது சிவாலய மகாதேவர் கோவிலில் கடந்த சில நாட்கள் முன்பு கோவிலில் உள்ளே முகத்தில் முகமூடி அணிந்த ஒருவர் கோவிலின் உள்ளே சென்று திருட முயற்சித்த போது சப்தம் கேட்டுள்ளது. சப்தம் கேட்டு அப்பகுதி மக்கள் கோவிலுக்கு அருகில் வரும்போது அந்த முகமூடி அணிந்த நபர் தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் குறித்து கோவில் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது முகமூடி அணிந்த நபர் ஒருவர் செல்வது தெரிய வந்தது.
இந்த நிலையில் இன்று இரணியல் காவல் நிலையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக அங்கு மோட்டார் பைக்கில் வந்த ஒருவரை பிடித்து விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துக் கொண்டிருந்தார். பின் போலீசார் அவர் கொண்டு வந்த வாகனத்தை சோதனை செய்தபோது விற்பனைக்காக வைத்திருந்த 30 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்து இரணியல் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் அவர் குளச்சல் அருகே உள்ள முத்துக்குமாரபுரம் வெள்ளியங்குளம் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் மகன் சிவா என்ற கழுகு சிவா (25) என்பது தெரியவந்தது.
பின் போலீசார் அவரிடம் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் பல திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். அதில் அவர் கடந்த 22-ம் தேதி திருவிடைக்கோடு மகாதேவர் ஆலயத்தில் முகமூடி அணிந்து திருட முயற்சி செய்தது தெரியவந்தது. அதன் பேரில் போலீசார் சிவா மீது திருட்டு வழக்கு மற்றும் கஞ்ச வழக்குகள் பதிவு செய்து இரணியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு பின் சிறையில் அடைத்தனர்.
சிவா என்ற கழுகு சிவா மீது குளச்சல் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி பட்டியலில் உள்ளார். இவன் மீது குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும் குளச்சல் காவல் நிலையத்தில் 7 வழக்குகளும் தற்போது இரணியல் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும் பதிவாயி உள்ளது குறிப்பிடத்தக்கது.



