திருச்செந்தூர், ஜூன் 12 –
திருச்செந்தூரில் போக்குவரத்து விதிகளை மீறி தாறுமாறாக ஆட்டோக்களை ஓட்டியதாக வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய சோதனையில் 6 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களிடமிருந்து ரூ.86ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
திருச்செந்தூர் பகுதியில் ஆட்டோக்களைத் தாறுமாறாகவும், வெளியூர் ஆட்டோக்களை அனுமதியின்றி இயக்குவதாகவும், அதிக ஆட்களை ஏற்றிச் செல்வதாகவும், கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும், ஆட்டோக்களின் பின்பக்கத்தில் அமர வைத்து ஓட்டுவதாகவும் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளுக்குப் புகார்கள் சென்றன. இதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின் பேரில் திருச்செந்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகன் தலைமையில் திருச்செந்தூர் மோட்டார் வாகன பாத்திமா பர்வீன்,மோட்டார் வாகன ஆய்வாளர் செயலாக்கப் பிரிவு தனபாலன் இன்று அதிரடி சோதனை நடத்தினார். இதில் வெளியூர் வாகனங்கள் அனுமதியில்லாமல் திருச்செந்தூரில் இயக்கப்படுவது, டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் ஆட்டோக்களை ஓட்டியது, இன்சூரன்ஸ் இல்லாமல் ஆட்டோக்களை ஓட்டியது, அனுமதிச் சீட்டு இல்லாமல் இயக்குவது என 6 ஆட்டோக்களைப் பறிமுதல் செய்தனர். மேலும் இதர குற்றங்களுக்காக 12 வாகனங்களுக்கு சோதனை அறிக்கைகள் வழங்கப்பட்டது. இந்த ஆட்டோக்களுக்கு ரூ.86ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது. மேலும் அதிக ஆட்களை ஏற்றி ஆட்டோக்களை இயக்குவது, பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பது, அனுமதியில்லாமல் இயக்குவது, லைசென்ஸ் இல்லாமல் ஓட்டுவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.