திருப்பூர், ஆக. 25 –
திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவை சார்பில் அனுப்பர்பாளையம் புதூர் பஸ் நிறுத்தம் அருகே திண்ணைப் பிரச்சாரம் நடைபெற்றது. ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் அட்லஸ் லோகநாதன் தலைமை தாங்கினார். கே.என். விஜயகுமார் எம்எல்ஏ முன்னிலை வகித்தார். பகுதி செயலாளர் கண்ணப்பன் வரவேற்று பேசினார்.
இதில் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்எல்ஏ கலந்து கொண்டு பேசியதாவது: திருப்பூர் மாநகராட்சியில் 30 நாட்களுக்கு மேலாக குப்பை அகற்றப்படாத நிலையில் விஷ ஜந்துகள் வீதியில் திரிகின்றன. நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. திருப்பூர் மாவட்ட கலெக்டர் மாநகராட்சி கமிஷனரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இதுவரை இல்லை. சுகாதார சீர்கேடு வேறு எந்த மாநகராட்சியிலும் இப்படி இல்லை. முதல்வர் ஸ்டாலின் வந்த போது கூட இங்கு வராமல் உடுமலையில் நிகழ்ச்சி நடத்தினார்கள். வாழ முடியாத நகராக திருப்பூர் உள்ளது.
இது குறித்து மிகப்பெரிய போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எடப்பாடியார் திருப்பூர் மாவட்டத்தில் பிரம்மாண்டமாக பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். தொழிலதிபர்கள், நெசவாளர்கள், வியாபாரிகள், அவிநாசி – அத்திகடவு திட்ட விவசாயிகள் ஆகியோர்களை சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளனர். 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும்.
இந்த ஆட்சியின் கொடுமைக்கு கிட்னி திருட்டு ஒரு சாட்சி. தமிழகம் முழுவதும் தொழில்கள் முடங்கி உள்ளது. அதனை சரி செய்ய வேண்டும். இங்கு முதல்வர் கள ஆய்வு நடத்த வேண்டும். அதை விடுத்து கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர்கள் வானம் ஏறி வைகுண்டம் போகவேண்டிய அவசியம் தூய்மைப்பணியாளர்களை துட்சமாக நினைக்கும் ஆட்சி நடைபெறுகின்றது. மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் உயிரிழந்தது இந்த ஆட்சியின் பாதுகாப்பற்ற நிலையை
காட்டுகிறது.
அடுத்த மாதம் 12-ந் தேதி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வடக்கு தொகுதியில் மேட்டுப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் பேசுகிறார். 2-வது தெற்கு தொகுதியில் கோட்டை மாரியம்மன் கோவில் அருகில் பேசுகிறார். 3-வது பல்லடத்தில் பேசுகிறார். ஒவ்வொருவரும் குடும்பம் குடும்பமாக வரணும். வடக்கு தொகுதியில் ஒரு லட்சம் பேர் தெற்கு தொகுதியில் ஒரு லட்சம் பேர், பல்லடத்தில் ஒரு லட்சம் பேரை சேர்த்து காட்டி மக்கள் எடப்பாடி பக்கம் இருக்கிறார்கள் என்பதை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாநகர் மாவட்ட இணைச்செயலாளர் சந்திரசேகர், சங்கீதா மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி, கொறடா கண்ணப்பன், பகுதி செயலாளர்கள் பிகேஎன் முத்து, கேசவன் ஹரிஹரசுதன், வானவில் கனகராஜ், தங்கராஜ், சிவளா தினேஷ், எம்ஜிஆர் மன்ற வேல் குமார், செயலாளர் சிட்டி பழனிச்சாமி, வர்த்தக அணி செயலாளர் எஸ்.பி.என். பழனிச்சாமி. எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வேல் குமார் சாமிநாதன், மாணவரணி செயலாளர் சதீஷ், விவசாய அணி செயலாளர் கலைமகள் கோபால்சாமி, ஜெயலலிதா பேரவை மாவட்ட இணை செயலாளர் ஆண்டவர் பழனிச்சாமி மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



