பரமக்குடி, செப். 4 –
ராமநாதபுரம் விதை ஆய்வு துணை இயக்குநர் இப்ராம்சா ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் விதை ஆய்வாளர் ஜெயந்தி மாலாவுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இது சம்பந்தமாக அவர் வெளியிட்ட அறிக்கையாவது: விதை விற்பனை நிலையங்களில் விதைகள் பெறப்பட்டவுடன் விதை மாதிரிகளை எடுத்து விதைப் பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி முளைப்புத்திறனை அறிந்து கொள்ள வேண்டும். இதில் அதிக முளைப்புத்திறன் உள்ள விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். விதை உற்பத்தியாளர் அல்லது விநியோகஸ்தரிடம் இருந்து தனியார் விற்பனை நிலையங்களில் விதைகள் பெறப்பட்டவுடன் கடைகளில் முறைப்படி மரச்சட்டங்களில் மீது வைத்து ஈரப்பதம் பாதிக்காமல், உரம் மற்றும் பூச்சிகொல்லிகளுடன் சேர்க்காமல் தனியாக இருப்பு வைத்திட வேண்டும். மேலும் பொது சுத்தம் பேண வேண்டும். சரியான சேமிப்பு முறைகளை கடைபிடிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரித்துள்ளார்.
விதை விற்பனை நிலையங்களில் விற்பனை உரிமம், இருப்பு பதிவேடு, விலைப்பட்டியல், முளைப்புத்திறன் அறிக்கை, பதிவுச்சான்று, விற்பனை ரசீது புக் ஆகியவைகள் சரியான முறையில் பராமரிக்கப்படுகின்றதா என்று ஆய்வு செய்யப்பட்டது. மேலும், மேற்கூறிய ஆவணங்கள் விற்பனை நிறுவனத்தில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். அதிகாரிகள் ஆய்விற்கு வரும்பொழுது உடன் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட வேண்டும். விதை வாங்கும் விவசாயிகளுக்கு விற்பனை ரசீது கட்டாயம் வழங்குவதுடன் அதில் விவசாயின் பெயர், முகவரி, விதையின் நிலை, குவியல் எண், காலாவதி நாள் ஆகியவைகள் இடம்பெற்றிருக்க வேண்டும். விற்பனை நிலையங்களில் விதை மாதிரிகள் 33 எண்ணிக்கை சேகரிக்கப்பட்டு விதைப்பரிசோதனை நிலையம் பரமக்குடிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேற்காணும் நடைமுறைகளை கடைப்பிடிக்காத நிறுவனங்கள் மீது விதைச் சட்டப்பிரிவுகளின்படி விற்பனை தடை, உரிமம் இடை நிறுத்தி வைப்பு, உரிமம் ரத்து மற்றும் நீதிமன்றம் மூலம் தண்டனை போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என விதை ஆய்வு துணை இயக்குநர் எச்சரித்துள்ளார். தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது சரியான ஆவணங்கள் இல்லாத 5 நிறுவனங்களில் 31 டன் விதை ரூ.10 லட்சம் மதிப்புள்ளவைக்கு விற்பனை தடை விதிக்கப்பட்டது மற்றும் 4 எண்ணிக்கை விதைச்சட்டங்களை கடைப்பிடிக்காத நிறுவனங்களுக்கு விளக்கும் கோரி நோட்டீஸ் வழங்கப்பட்டது.



