களியக்காவிளை, ஜூலை 10 –
யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் உள்ள களமெழுத்துப் பாட்டு கன்னியாகுமரி மாவட்டம் மீனச்சல் கிராமத்தில் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
கன்னியாகுமாரி மாவட்டம் மீனச்சல் கிராமத்தில் அழிந்து வரும் களமெழுத்துப் பாட்டு என்ற பாரம்பரிய வழிபாட்டு முறையை பின்பற்றி மூலிகை பச்சிலை வண்ண பொடிகளால் பத்ரகாளியின் தத்ரூபத்தை வரைந்து கிராம மக்கள் வழிபட்டனர்.
களமெழுத்துப் பாட்டு என்பது கேரளாவில் செய்யப்படும் ஒரு வழிபாட்டு சடங்கு கலை வடிவம்.
இதில் தரையில் தெய்வங்களின் உருவங்களை மூலிகை வண்ணப் பொடிகளால் வரைந்து அதைப் பாடியும், நடனமாடியும் வழிபடுகிறார்கள். பத்ரகாளி, அய்யப்பன், வேட்டக்கொருமகன் போன்ற தெய்வங்களுக்காக இந்த வழிபாடு நடத்தப்படுகிறது. காலம் செல்ல தற்போது இந்த வழிபாட்டு முறையை பின்பற்ற தேவையான கலைஞர்கள் இல்லாத காரணத்தால் இந்த வழிபாட்டு முறை மக்கள் பின்பற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சில பகுதிகளில் தற்போதும் இந்த பாரம்பரிய வழிபாட்டு முறை மக்கள் கைவிடாமல் வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மலையாள மக்கள் அதிகம் வாழும் கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரளா எல்லை பகுதியான மீனச்சல் கிராமத்தில் உள்ள மேலே வீடு பத்திரகாளி அம்மன் கோவிலில் களமெழுத்துப் பாட்டு என்ற பாரம்பரிய வழிபாடு நடைபெற்றது. தரையில் மூலிகை இலைகளால் தயாரித்த வண்ணப் பொடிகளைக் கொண்டு தெய்வத்தின் உருவத்தை வரைவது களம்பாட்டு. வரையப்பட்ட உருவத்தைப் பற்றியும், தெய்வத்தின் புராணங்களைப் பற்றியும் பாடி வரைபடத்தை அழித்து சடங்கை நிறைவு செய்தது.
இந்த வழிபாட்டின் நோக்கம் தெய்வங்களின் அருளைப் பெறுதல், தோஷங்களை நீக்குதல், மங்களகரமான வாழ்வு அமைதல் களமெழுத்துப் பாட்டின் முக்கியத்துவம் ஆகும்.
களமெழுத்துப் பாட்டும் யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மீனச்சல் கிராமத்தில் நடைபெற்ற இந்த வழிபாட்டில் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.