கிருஷ்ணகிரி, ஏப். 18 –
“மொழியால், உணர்வால் ஒன்றிணைவோம், பா.ஜ., கூட்டணியை வீழ்த்தி தமிழகத்தில் மீண்டும் முதல்வராக ஸ்டாலினை அமர வைக்க பாடுபடுவோம்” என மதியழகன் எம்.எல்.ஏ., பேசினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட போச்சம்பள்ளி, மோட்டூர் சுற்றுவட்டார கிராமங்களில், தி.மு.க., வேட்பாளர் மதியழகன் எம்.எல்.ஏ., பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது, பொதுமக்களிடம் அவர் பேசியதாவது: காலை உணவுத்திட்டம், புதுமைப்பெண், தமிழ் புதல்வன், நான் முதல்வன், அன்புக்கரங்கள், தாயுமானவர், இன்னுயிர் காக்கும் –48, மக்களை தேடி மருத்துவம், மகளிர் உரிமைத்தொகை, விடியல் பயணம் என சொல்லிய மற்றும் சொல்லாத திட்டங்களை செய்து கொடுத்து குடும்பங்கள் தோறும் சென்றுள்ளது திமுக அரசு. ஆனால், தமிழகத்தின் நலனில் அக்கறையில்லாமல் மத்திய பா.ஜ., அரசிடம் கட்சியை அடகு வைத்து மக்களையும் அடகு வைக்க பார்ப்பது, அ.தி.மு.க., இதை மக்கள் புரிந்து கொண்டு ஓட்டளிக்க வேண்டும். மக்கள் நலனில், வளர்ச்சியில் அக்கறை காட்டும் திமுகவை, 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக கிருஷ்ணகிரி ரவுண்டானாவில் மத்திய அரசு கொண்டு வந்த தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்ததை கொண்டாடும் வகையில் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தி.மு.க.,வினர் கொண்டாடினர்.
இதில், மதியழகன் எம்.எல்.ஏ., பேசியதாவது: தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரளா மாநிலங்களில், லோக்சபா தொகுதிகளை பெயரளவிற்கு உயர்த்தி, ஹிந்தி பேசும் வட மாநிலங்களில் அதிக லோக்சபா தொகுதியை உயர்த்தி, தென்மாநிலங்களை புறந்தள்ளும் மத்திய, பா.ஜ., அரசின் முயற்சி தோல்வியடைந்துள்ளது. இதுதான் நமது முதல் படி. சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவது நமது அடுத்த படி என நினைத்து அனைவரும் உழைக்க வேண்டும். மொழியால், உணர்வால் ஒன்றிணைவோம், பா.ஜ., கூட்டணியை வீழ்த்தி, தமிழகத்தில் மீண்டும் முதல்வராக ஸ்டாலினை அமர வைக்க பாடுபடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
கிருஷ்ணகிரி, தி.மு.க., நகர பொறுப்பாளர்கள் அஸ்லம், வேலுமணி, கவுன்சிலர்கள், தி.மு.க., நிர்வாகிகள் உடனிருந்தனர்.



