ராமநாதபுரம், மார்ச் 3 –
மீனவர்கள் பிரச்சனையில் எதையும் கண்டுகொள்ளாத திமுக அரசை வரும் தேர்தலில் மக்கள் உறுதியாக நிராகரித்து விடுவார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் செய்தியாளர்களிடம் கூறினார்.
அவர் ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சி மடம், நாகாச்சி, மண்டபம் பகுதி மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற போது இலங்கை அரசால் 41 மீனவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களது படங்களையும் மீட்க மாநில அரசு இதுவரை எதையும் செய்யவில்லை. எதையும் கண்டுகொள்ளாத மாநில திமுக அரசை இந்தத் தேர்தலில் மக்கள் உறுதியாக நிராகரித்து விடுவார்கள்.
கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கவும் அவர்களது படகுகளை மீட்கவும் அதிமுக சார்பில் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர் ஆகியோரிடம் மீனவர்கள் வழங்கிய கோரிக்கை மனுவை அளித்துள்ளோம். மீனவர்களின் நிலை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளோம். கடந்த காலத்தில் அதிமுக ஆட்சியில் 2011 முதல் 2021 வரை கைது செய்யப்பட்ட மீனவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட்டு தண்டனை ரத்து செய்யப்பட்டு எல்லா விதமான பாதுகாப்பு நிதி வழங்கி உதவி செய்தோம் இன்றைக்கும் நாங்கள் எந்த பதவியில் இல்லாவிட்டாலும் கைது செய்யப்பட்ட மீனவர்கள் குடும்பத்தை நேரில் சந்தித்து அவர்களுக்கு உரிய நிதி உதவி வழங்கி உள்ளோம்.
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் மீனவர்களின் பாதுகாப்பு அரணாக என்றும் அதிமுக இருக்கும் என்பதை உறுதியாக கூறிக் கொள்கிறேன். அதிமுக ஆட்சி அமைந்த உடன் மீனவர்கள் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக நிரந்தர தீர்வு காணப்படும் அதற்கு எடப்பாடியார் என்றும் மீனவர்களின் பாதுகாவலனாக இருப்பார் என்பதை உறுதியாக கூறிக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.



