பரமக்குடி, ஆக. 23 –
பரமக்குடி அருகே வாழவந்தாள்புரம் கிராமத்தில் மின்னல் தாக்கியதில் சகோதரிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே வாழவந்தாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் நூருல் அமீன். இவரின் மகள்கள் செய்யது ஆஸ்பியா பானு (13), சபிக்கா பானு (9). இருவரும் முறையே ஒன்பதாம் மற்றும் ஐந்தாம் வகுப்பு படித்து வருகின்றனர். இருவரும் இன்று மதியம் வீட்டின் அருகே உள்ள வயல்வெளியில் வேப்ப மரத்தின் கீழ் வேப்பங்கொட்டைகளை சேகரித்துக் கொண்டிருந்தனர். அப்போது, மின்னல் தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உயிரிழந்த இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து சத்திரக்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மின்னல் தாக்கியதில் சகோதரிகள் உயிரிழந்த சம்பவம் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. நூருல் அமீனுக்கு இரண்டு மகள்கள் இருந்த நிலையில் இருவரும் மின்னல் தாக்கி உயரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்த சிறுமிகளின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்க செய்தது.


