நாகர்கோவில், அக். 11 –
குமரி மாவட்டத்தில் கடைநிலை காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை தினமும் 18 பேர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருடன் கலந்துரையாடும் ‘மனம் திறந்து’ என்ற நிகழ்ச்சி கடந்த 7ம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. மாவட்டத்தில் உள்ள அனைத்து அதிகாரிகள் காவலர்கள் சுமார் 2 ஆயிரம் பேருடன் நேரடியாக அமர்ந்து கலந்துரையாடிய நிகழ்ச்சியின் இறுதி நாள் நிகழ்ச்சியான இன்று 11ம் தேதி ஆயுதப்படை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கலந்துரையாடலின் போது காவலர்கள் தாங்கள் பணியில் எதிர்கொள்ளும் சவால்கள், சாதனைகள், தனிப்பட்ட பிரச்சனைகள், காவல்துறையை மேம்படுத்த ஆலோசனைகள் போன்றவைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
இந்த மனம் திறந்து நிகழ்ச்சியில் மூலம் வார விடுமுறையை உறுதிப்படுத்தல், காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள் தங்களின் கீழ் பணியாற்றுபவர்களை மரியாதையாக நடத்துதல், சுழற்சி முறையில் பணி அமர்த்துதல், கவுன்சிலிங் அடிப்படையில் பணி மாறுதல் வழங்குதல், சட்டம், சைபர் கிரைம் மற்றும் தொழில்நுட்ப பயிற்சிகள்,
தம்பதியினருக்கு ஒரே நாளில் வார விடுப்பு, காவல் ஆளினர்களுக்கு வழங்கப்படும் அனைத்து பண படிகளும் உரிய நேரத்தில் கிடைப்பதற்கு ஆவண செய்தல், குழந்தை பேறுக்காக சிகிச்சை பெற்று வரும் காவல் ஆளினர்களுக்கு இலகுவான பணி நியமித்தல், சோதனைச் சாவடி பணிக்கு வீட்டில் இருந்து 20 கிலோமீட்டர் குறைவான தூரம்,
தம்பதியினர் இருவரும் காவல் ஆளினர்களாக இருக்கும் பட்சத்தில் ஒருவரை மட்டும் வெளி மாவட்ட பாதுகாப்பு அலுவலுக்கு அனுப்புதல், பிறமாவட்ட பாதுகாப்பு அலுவல்களுக்கு செல்லும் போது அந்தந்த உட்கோட்டத்திலிருந்தே தனி வாகனம்
உடல் உள்ளுறுப்புகளை (viscera) ஆய்வக சோதனைக்கு உட்படுத்த உட்கோட்டத்தின் வாயிலாக தனி காவல் வாகனம் மூலம் எடுத்துச் செல்லுதல், மலைப்பாங்கான பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் அங்கு பணிபுரியம் காவல் ஆளினர்கள் பணி நிமித்தமாக செல்லும் போது வன விலங்குகளிடமிருந்து தற்காத்துக்கொள்ளும் பொருட்டு நான்கு சக்கர வாகனங்கள் வழங்குதல், சோதனைச் சாவடிகளில் காவல் ஆளினர்களுக்கு கழிப்பிடம், மின்விசிறி, இருக்கைகள் அமைத்து கொடுத்தல், அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்களுக்கான கழிப்பிட வசதி, காத்திருப்பு அறை மற்றும் சுற்றுச்சுவர் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு இந்த மனம் திறந்து நிகழ்ச்சியின் மூலம் பல்வேறு காவலர் நல நடவடிக்கைகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எடுத்துள்ளார். இறுதி நாள் நிகழ்ச்சியில் காவலர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.



