மார்த்தாண்டம், ஆக. 7 –
மார்த்தாண்டம் அருகேயுள்ள கீழப்பம்பம் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்த வெளி கிணறுகள் உள்ளன. இந்த தண்ணீரில் தற்போது பெட்ரோல் வாடை வீசி வருகிறது. இன்று மாலை ஜெகன் என்பவர் கிணற்றில் இருந்து கிடைத்த தண்ணீர் முழுவதும் டீசல் பெட்ரோல் கலந்து இருந்தது. அந்த தண்ணீரை பற்ற வைத்த போது தீ மளமளவென எரிந்தது. இது போன்று மேலும் பத்துக்கு மேற்பட்ட கிணறுகளில் இந்த பெட்ரோல் டீசல் கலப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த பகுதியில் அரசு போக்குவரத்து பணிமனை மற்றும் பெட்ரோல் பங்குகள் செயல்பட்டு வருகிறது. பெட்ரோல் டீசல்கள் கசிந்து கிணறுகளில் கலந்து உள்ளதா? என நகராட்சி சுகாதாரத் துறை, பெட்ரோலியத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் குழித்துறை நகராட்சி ஆணையாளர் ராஜேஸ்வரன், சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் ஆகியோர் சம்பவ இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். சம்பந்தப்பட்ட ஆயில் நிறுவன அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இன்று தீயணைப்பு துறை அதிகாரிகள், பெட்ரோலிய துறை அதிகரிகள் சம்மந்தபட்ட கிணறுகளில் ஆய்வு செய்தனர். மேலும் அந்த பகுதிகளில் உள்ள பெட்ரோல் பாங்குகளில் தொடர் சோதனை நடைபெற்று வருகிறது.