மார்த்தாண்டம், பிப். 2 –
மார்த்தாண்டம் அருகே கொடுங்குளம் பகுதியில் வாலிபர் ஒருவர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து மார்த்தாண்டம் போலீசார் அந்த பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தார். போலீசார் விரட்டிச் சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.
அதைத் தொடர்ந்து அவரிடம் நடத்தி விசாரணையில் அவர் நல்லூர் பகுதியை சேர்ந்த ஸ்டீபன் மகன் பென்சிகர் (22) என்பதும், தொழிலாளி என்பதும் தெரிய வந்தது. தொடர் விசாரணையில் அந்த பகுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதையும் ஒப்புக் கொண்டார். ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து குமரியில் பல்வேறு முக்கிய பிரமுகர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளதாக கூறினார்.
தொடர்ந்து பென்சிகர் விற்பனைக்காக வைத்திருந்த 1.15 கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பென்சிகர் யார் யாருக்கு கஞ்சா சப்ளை செய்தார் என்பது குறித்தும் போலீசார் ரகசியமாக விசாரித்து வருகின்றனர்.



