மயிலாடுதுறை, செப். 9 –
மயிலாடுதுறையில் கல்விப் பணியாற்றி வரும் பட்டதாரி ஆசிரியை உமா மோகனுக்கு பன்னாட்டு லயன்ஸ் சங்கம் சார்பில் “அறிவுச்சுடர்” விருது வழங்கி பாராட்டப்பட்டது. ஜெயங்கொண்டம், சோழன் சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்களின் மாவட்ட ஆசிரியர் தின விழா மற்றும் அறிவுச்சுடர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
லயன்ஸ் மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் தலைமை வகித்தார். மாவட்ட ஆளுநர் மணிவண்ணன், மாவட்டத் தலைவர் ரமேஷ்குமார், மாவட்ட நிர்வாக அலுவலர் இராஜன், ஜெயங்கொண்டம் சோழன் சிட்டி லயன் சங்கத்தலைவர் திருநாவுக்கரசு, செயலாளர் செல்வராஜ், பொருளாளர் பிரபாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி, லயன்ஸ் சங்க பன்னாட்டு இயக்குனர் சீனிவாசன், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன், மாவட்ட நெறியாளர் முகமது ரஃபி, முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் சவரிராஜ், விஜயலட்சுமி சண்முகவேல், ஸ்டாலின் மற்றும் லயன்ஸ் நிர்வாகிகள் ரத்னகுமார், ஜனார்த்தனன், முருகானந்தம் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் கலந்து கொண்டு ஆசிரியர்களை பாராட்டி சிறப்புரையாற்றினார்.
இந்த விழாவில் அர்ப்பணிப்போடு கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கு கல்விப்பணி ஆற்றி வரும் மயிலாடுதுறை, அருவாப்பாடி கிருஷ்ணா உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியை உமா மோகனுக்கு பன்னாட்டு லயன்ஸ் சங்கங்களின் “அறிவுச்சுடர் விருது” வழங்கி பாராட்டப்பட்டது.
விருது பெற்ற ஆசிரியை உமா மோகனை மாயூரம் லயன்ஸ் சங்கத் தலைவர் சிராஜுதீன், செயலாளர் வெங்கட்ராமன், பொருளாளர் இளங்கோவன் மற்றும் லயன்ஸ் நிர்வாகிகள் பாராட்டி வாழ்த்தினர். இந்த விழாவில் லயன்ஸ் சங்க நிர்வாகிகள், ஆசிரியர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.



