மதுரை, அக். 07 –
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், பெரிடொனியல் டயாலிசிஸ் சொசைட்டி ஆஃப் இந்தியா மற்றும் இந்திய மருத்துவ சங்கம் (மதுரை கிளை) ஆகியவற்றுடன் இணைந்து இரண்டு நாள் சிறுநீரகவியல் கருத்தரங்கை (PDSICON 2025) நடத்தியது.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான தெரிவுகளில் ஒன்றான ‘வயிற்று தசைவழி டயாலிசிஸ்’ குறித்த கருத்தரங்கு அதுவாகும். 300-க்கும் மேற்பட்ட சிறுநீரகவியல் வல்லுநர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்கள், மருத்துவத்துறை வல்லுநர்கள் ஆகியோர் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வந்து இதில் கலந்து கொண்டனர்.
இக்கருத்தரங்கை தலைமை விருந்தினரும் அமெரிக்காவின் மிசெளரி ஸ்கூல் ஆஃப் மெடிசன் கல்லூரியின் ஹோம் டயாலிசிஸ் துறை வல்லுனருமான பேராசிரியர் ரமேஷ் கண்ணா தொடங்கி வைத்தார். மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் தலைமை சிறுநீரகவியல் மருத்துவரும், இக்கருத்தரங்கின் அமைப்புக்குழு தலைவரும் PDSICON – ன் தலைவருமான மருத்துவர் சம்பத்குமார் முன்னிலையில் இந்நிகழ்வு தொடங்கி
வைக்கப்பட்டது.
இக்கருத்தரங்கில் விவாதிக்கப்பட்ட தலைப்புகளில் சில: வயிற்று தசைவழி டயாலிசிஸ் சிகிச்சை முறைகள், குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு, இல்லத்திலிருந்தே சிகிச்சையளிப்பதில் உள்ள பல்வேறு முறைகள், வயிற்று தசைவழி டயாலிசிஸ் முறையில் உள்ள பல்வேறு தொழில்நுட்பங்கள், அதில் உள்ள சிக்கல்கள், ஒவ்வொரு நோயாளிக்கும் ஏற்ற முறையில் தனித்துவமான கவனத்தை வழங்குதல் முதலியவை குறித்து தலைமை சிறுநீரகவியல் மருத்துவரான சம்பத்குமார் பேசுகையில், “நாட்பட்ட சிறுநீரக செயலிழப்புக்கு வீட்டிலேயே செய்யப்படும் வயிற்று தசைவழி டயாலிசிஸ் முறை, இன்று உலகமெங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது. பிரதமரின் தேசிய சுகாதார இயக்கம் மற்றும் தமிழகத்தில் உள்ள ‘மக்களைத்தேடி மருத்துவம்’ ஆகியவற்றிலும் இந்த சிகிச்சை முறை வெற்றிகரமாக உள்ளடக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.



