மதுரை, நவம்பர் 03 –
மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள கிருதுமால் கால்வாய் தூர் வாருகிறோம் என்ற பெயரில் தூர்வாரி குப்பைகளை அள்ளி மாநகராட்சி பணியாளர்கள் ரோட்டின் ஓரமாக போட்டுவிட்டு போட்டோ சூட் மட்டும் எடுத்துக் கொண்டு அள்ளிய குப்பைகளை அப்புறப்படுத்தாமல் அப்படியே விட்டுச் சென்றுள்ளனர். இதனால் அந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அதிகமாக துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அந்த வழியாக செல்லும் பள்ளிக் குழந்தைகள், முதியவர்கள், மற்றும் பொது மக்களுக்கு எளிதாக
தொற்று நோய் பரவும் அபாய சூழல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அப்பகுதி குடியிருப்பு மக்கள் வார்டு கார்ப்பரேஷன் அலுவலகத்திற்கு சென்று கேட்டதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மெத்தனமாக அள்ளுவதற்கு வண்டியே இல்லை என்று பொதுமக்களை திருப்பி அனுப்பியதாக தெரிவிக்கின்றனர். எனவே மாநகராட்சி ஆணையாளர் உடனடியாக கவனத்தில் கொண்டு குப்பைகளை சரியான முறையில் அள்ளி தொற்று நோய் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



