மதுரை மே 8,
மதுரை கள்ளழகர் கோவிலில் வசந்த உற்சவ திருவிழா வருகிற 14-ந்தேதி தொடங்குகிறது. மதுரை மாவட்டம் அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திரு விழாக்களில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் நடைபெறும் வசந்த உற்சவ விழா முக்கிய மானது ஆகும். வருகிற மே 14-ந்தேதி அன்று மாலை 6.30 மணிக்கு மேல் 7. 30 மணிக்குள் விருச்சிக லக்னத்தில் வசந்த உற்சவ விழா தொடங்குகிறது. இதில் கள்ளழகர் பெருமாள், தேவியர்களுடன் பல்லாக்கில் எழுந்தருளி வசந்த மண்டபம் சென்று எழுந்தருள்வார். இந்த விழா வருகிற மே 23-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த வசந்த உற்சவ திருவிழாவின் போது ஒவ்வொரு நாளும் மாலையில் 5 மணிக்கு சுவாமி ஆஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி, ஆடி வீதிகள் வழியே உலா வந்து, கிருஷ்ணர் சன்னதி வழியே பதினெட்டாம்படி கருப்பண சாமி கோவில் வழியாக சென்று அங்கிருந்து வசந்த மண்டபம் வந்தடைவார். இந்த திருவிழா 10 நாட்கள் கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் நடைபெறும். திருவிழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கடாசலம், துணை ஆணையர் கலைவாணன் மற்றும் அறங்காவலர்கள், கண்காணிப்பாளர்கள், கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.



