மதுரை, செப். 06 –
மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் நெடுஞ்சாலை துறை சார்பில் ரூபாய் 190 கோடி மதிப்பீட்டில் 2100 மீட்டர் நீளத்தில் மேம்பாலம் கட்டப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே. பிரவீன் குமார் தலைமையில் பொதுபணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் அமைச்சர் எ.வ. வேலு மற்றும் பதிவுத்துறை மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் பி. மூர்த்தி ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடையே பேசுகையில்: கோரிப்பாளையம் சந்திப்பில் நடைபெற்று வரும் சாலை மேம்பாலப் பணிகள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கடந்த 30.10.23 அன்று துவங்கி வைக்கப்பட்டது. இந்த பாலம் மதுரை மாநகரின் வடபகுதியையும் தென்பகுதியையும் இணைக்கும். பாலத்தின் ஏறுதளம் தமுக்கம் பகுதியில் தொடங்குகிறது. கோரிப்பாளையம் சந்திப்பை கடந்து நெல்பேட்டை அண்ணா சிலை சந்திப்பில் முடிகிறது. வைகை ஆற்றில் தற்போதைய ஏவி பாலத்திற்கு இணையாக புதிதாக உயர்மட்ட பாலம் அமைக்கப்படுகிறது.
மேலும் கூடுதலாக ஒரு இணைப்பு பாலம் கோரிப்பாளையம் சந்திப்பிலிருந்து செல்லூர் நோக்கி அமைய உள்ளது. இந்த பாலத்தின் கீழ் இருபுறமும் சேவைச் சாலை அமைக்கப்பட உள்ளது. இச்சாலை மேம்பாலத்தினால் மதுரை மாநகரின் முக்கிய சாலை சந்திப்புகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என்று தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் மற்றும் உதவிப் பொறியாளர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.



