நாகர்கோவில், பிப்ரவரி 28 –
மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது. பெண்களின் சபரிமலை எனப்படும் இந்த கோவிலில் கேரள மாநில பெண் பக்தர்கள் இருமுடி கட்டுடன் கோவிலுக்கு வருவது வழக்கம்.
கோவில் பாதுகாப்பு பணிக்காக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்தும் மற்ற மாவட்டங்களில் இருந்தும் சுமார் 800 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் பாதுகாப்பு பணிக்காக மாவட்ட காவல்துறை சார்பாக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்கள், பார்க்கிங் இடங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், கடற்கரை பகுதிகளில் சுமார் 150 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு அதனை காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட காவல் துறையில் உள்ள தொழில்நுட்ப பிரிவினர் பயன்படுத்தப்பட உள்ளனர்.
விழா நடைபெறும் இடங்களை சுற்றி சுமார் 18 இடங்கள் கண்டறியப்பட்டு கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கபட்டுள்ளது. கண்காணிப்பு கோபுரத்தில் பணியில் ஈடுபடுத்தப்படும் போலீசார் பைனாகுலர் மூலம் கண்காணிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு உதவுவதற்காக மாவட்ட காவல்துறையின் சிறப்பு ஏற்பாட்டில் MAY I HELP YOU கூடங்கள் அமைக்கப்பட்டு தமிழ், மலையாளம் தெரிந்த போலீசார் பக்தர்களுக்கு வழிகாட்டவும், கூட்டத்தில் தவற விட்டவர்களை கண்டுபிடித்து பாதுகாப்பாக ஒப்படைக்கவும் ஒலிப்பெருக்கி வசதிகளுடன் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பக்தர்களுக்கு உதவ தண்ணீர் வசதியும் இதில் ஏற்படுத்தப்படும்.
கடற்கரை பாதுகாப்பு பணிகளுக்காக கடலோர பாதுகாப்பு படைஇ கடலோர பாதுகாப்பு குழம போலீசார் மற்றும் மாவட்ட காவல்துறை என மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு கடற்கரை முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளது.
தீ விபத்து ஏற்பட்டாலோ அல்லது பக்தர்களுக்கு உடல்நிலை சரி இல்லாத பட்சத்தில் பக்தர்களுக்கு உதவும் வண்ணம் மருத்துவ முதலுதவி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் மற்றும் மருத்துவ துறையினருடன் இணைந்து போலீசாரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
பக்தர்களுக்கு வழிகாட்டும் வகையில் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் முக்கியமான இடங்களில் வழிப்பாதைகள், பார்க்கிங் வசதிகள், போக்குவரத்து வழிகாட்டல்கள், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றை குறிக்கும் பேனர்கள் அமைக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் கூடும் இடங்கள், பொங்கல் இடும் இடம், பார்க்கிங் பகுதி ஆகிய இடங்களில் மே ஐ ஹெல்ப் யூ கியூ ஆர் கோடு வைக்கப்பட்டு அதனை ஸ்கேன் செய்வதன் மூலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் செல்போன் எண், அனைத்து துறை எண்கள், புகார் பதிவு செய்யும் காவல்துறை இணையதளம், மாவட்ட காவல்துறையின் சமூக வலைதள பக்கங்கள் ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
பக்தர்கள் தங்கள் வழிபாட்டிற்காக கடல் தண்ணீர் பயன்படுத்திகொள்ள டிரம்பில் நிரப்பி வைக்கப்படும் கடலில் தண்ணியில் இறங்கி வழிபாடு செய்ய தயக்கம் உள்ள பக்தர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளமுடியும்.
திருவிழா பாதுகாப்பு பணிக்காக மூன்று இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், தக்கலை, நாகர்கோவில் இருந்து வரும் வாகனங்கள் திங்கள் சந்தை, லட்சுமிபுரம் வழியாக நடுவூர்கரை தற்காலிக பேருந்து நிறுத்தத்தினை பயன்படுத்திக் கொள்ளலாம். மார்த்தாண்டம், கருங்கல் பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகள் குளச்சல் வழியாக வெட்டுமடை தற்காலிக பேருந்து நிறுத்தத்தினையும். நாகர்கோவிலில் இருந்து வரும் பேருந்துகள் மணவாளக்குறிச்சி வழியாக புதூர் தற்காலிக பேருந்து நிலையத்துக்குள் வர அனுமதிக்கப்படுகிறது.
ஆறு சக்கர வாகனங்கள், ஆம்னி பேருந்துகள் வேன் ஆகிய வாகனங்கள் லட்சுமிபுரம் ஆம்னி பேருந்து நிலையத்திற்குள் வர அனுமதிக்கப்படுகிறது இவர்கள் வேறு எந்த தற்காலிக பேருந்து நிலையத்திற்கும் செல்ல அனுமதி இல்லை. வடக்கு கோவிலன் விளை மற்றும் லட்சுமிபுரம் கல்லூரி வளாக மைதானம் ஆகியவற்றில் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்படுகிறது.
மண்டைக்காடு திருவிழா பணிக்காக காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதில் காவலர்கள் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுவர். ஏதேனும் தகவல்கள் குறித்து காவல் கட்டுப்பாட்டு அறை மூலம் தெரிந்து கொள்ளலாம்.


