குளச்சல், ஏப். 30 –
நாகர்கோவில் பட்டகசாலியன்விளை பகுதியை சேர்ந்தவர் பீட்டர் மகன் போஜன் (33). நாகர்கோவிலில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் லோன் வழங்கும் பிரிவில் ஊழியராக வேலை செய்து வருகிறார். மணவாளக்குறிச்சி கொல்லன் விளையை சேர்ந்த விபின் பிரியன் (31) என்பவர் போஜன் பணியாற்றிய நிதி நிறுவனத்தில் கடந்த பிப்ரவரி மாதம் ரூ.62 ஆயிரத்து 294 ரூபாய் கடன் வாங்கியதாக தெரிகிறது.
இதை அடுத்து முதல் மாத தவணையை பிபின் பிரியன் உரிய தேதிக்குள் செலுத்தவில்லை என தெரிகிறது. இதையடுத்து நிதி நிறுவன ஊழியர் போஜன் சம்பவ தினம் பிபின் வீட்டிற்கு பணம் கேட்க சென்றார். அப்போது அங்கு அவருடைய தாய் மட்டும் இருந்துள்ளார்.
இதை அடுத்து போஜன் செல்போனில் தொடர்பு கொண்டு பிபின் பிரியனிடம் பேசினார். தனது வீட்டிற்கு சென்றதால் ஆத்திரமடைந்த பிவின் எப்படி என் வீட்டிற்கு சென்று பணம் கேட்பாய்? எனக்கூறி தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். மேலும் அறிவாளால் வெட்டிக் கொன்று விடுவேன் என செல்போனில் போஜனை மிரட்டினார்.
இதனால் பயந்து போன போஜன் இது குறித்து மனவளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் நிதி நிறுவன ஊழியரை மிரட்டிய விபின் பிரியன் மீது வழக்கு பதிவு செய்தனர். பிபின் மீது மனவளக்குறிச்சி, மண்டைக்காடு, திருவட்டார், பூதப்பாண்டி காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளதும் பிரபல ரௌடியாக இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.


