பூதப்பாண்டி, ஜனவரி 31 –
குமரி மாவட்டம் பூதபாண்டியில் பிரசித்தி பெற்ற பூதலிங்க சுவாமி சிவகாமியம்பாள் கோவில் உள்ளது. இந்த கோவில் தை திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழாவில் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான 9ம் நாள் திருவிழாவான இன்று சனிக்கிழமை 31ஆம் தேதி காலை திருத்தேர்களில் விநாயகர், சுவாமியையும், அம்பாளையும் எழுந்தருள செய்து திருத்தேர் வடம் இழுத்து தேரோட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு தேரை வரம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடக்கி வைத்தார்.
இதை அடுத்து அங்கிருந்து திரளான பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர். நிகழ்ச்சியில் மாநில உணவு ஆணைய தலைவர் சுரேஷ் ராஜன், மாவட்ட போலீஸ் எஸ் பி ஸ்டாலின், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், தளவாய் சுந்தரம் எம்எல்ஏ உள்ளிட்ட பல பிரமுகர் கலந்து கொண்டனர்.
திருவிழாவில் அசம்பாவிதங்கள் தவிர்க்க மாவட்ட எஸ்பி ஸ்டாலின் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். விழாவில் தொடர்ந்து இரவு 9 மணிக்கு சுவாமியும் அம்மனும் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி தேர் மீது உலா வருதல் நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு சப்தாவர்ணம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
10-ம் நாளான ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அபிஷேக ஆராதனை உள்ளிட்ட நிகழ்ச்சியுடன் இரவு 9 மணிக்கு தெற்போற்சவத்திற்கு சுவாமி புறப்படும் நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு தெப்ப உற்சவம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.



