கன்னியாகுமரி, ஜன. 22 –
புன்னார்குளம் சந்திப்பில் சாலை விபத்தில் சிக்குவோர் உயிரைக் காப்பாற்ற நவீன வசதிகளுடன் கூடிய உயிர்காக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி ஸ்டாலின் பேட்டி அளித்தார்.
குமரி மாவட்டத்தில் கடந்த ஓராண்டுக்கு முன்னர் மாவட்ட எஸ் பி யாக டாக்டர் ஸ்டாலின் பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். இதனால் குற்ற செயல்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வந்தது. மேலும் மக்கள் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் ஊர்காவல் கண்காணிப்பு திட்டம், நிமிர்த்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் தொடங்கி அதன் மூலம் பொது மக்களுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கி வருகிறார்.
அந்த வகையில் நேற்று அஞ்சுகிராமம் புனித ஸ்டெல்லாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி நிர்வாக தலைவர் டாக்டர் ஜாண்வில்சன் தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி டாக்டர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது.
அஞ்சுகிராமம் பகுதியில் காலை மாலை வேலைகளில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் செல்லும் நேரம், மாணவ மாணவிகள் பள்ளி கல்லூரிக்கு செல்லும் நேரம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது என்பதை அறிகிறோம். அதை சீரமைக்கும் வகையில் காலை மாலை இருவேளையும் போக்குவரத்து காவலர்கள் மூலம் போக்குவரத்து சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கனரக வாகனங்கள் விபத்து ஏற்படும் வகையில் சென்றால் சட்டபடி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும் மயிலாடி, புன்னார்குளம், பொட்டல்குளம், அழகப்பபுரம் வேதமாணிக்கபுரம், உள்ளிட்ட சுற்றுவட்டார பொதுமக்கள், பயணிகள், வாகன ஓட்டிகள் நலன் கருதியும், விபத்து மற்றும் பல்வேறு அவசர அத்தியாவசிய மருத்துவ தேவைகளை கருத்தில் கொண்டும் புன்னார்குளம் சந்திப்பில் நவீன வசதிகளுடன் கூடிய 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு எஸ்.பி ஸ்டாலின் கூறினார்.
இப்பேரணியில் மாணவர்களோடு டிஎஸ்பி ராஜா ஆய்வாளர்கள் முத்துக்குமரன், செல்லத்துரை, உதவி ஆய்வாளர்கள் பிரிய ராஜ்குமார், ஜெயப்பிரகாஷ், அஞ்சுகிராமம் பேரூராட்சி கவுன்சிலர் ஜோஸ்திவாகர், பள்ளி தாளாளர் வழக்கறிஞர் ஜெபில் வில்சன், ஜாண்ஸ் டிரஸ்டின் பொருளாளரும், ஜாண்ஸ் செண்ட்ரல் பள்ளியின் முதல்வருமான ஷெரின் சந்திர லீலா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.



