மதுரை, ஆகஸ்ட் 11 –
மதுரை விமான நிலையத்திற்கு வந்த தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வைக்கின்ற கோரிக்கை பீகாரில் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது. அது பற்றிய விவாதங்கள் வேண்டும் என கேட்கிறோம்.
இதுவரைக்கும் மத்திய ஒன்றிய அரசு காது கொடுத்து கேட்கவில்லை. இதற்கு மேல் நாடாளுமன்றம் நடக்குமா என்பது தெரியவில்லை.
எனவே பாராளுமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணையம் வரை அனைத்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் நடை பயணமாக சென்று மனு அளிக்க உள்ளோம்.
நிச்சயமாக இந்த எஸ்.ஐ.ஆர் க்கு ஒன்றிய பிஜேபி அரசு பதில் சொல்ல வேண்டும்.
மக்களிடையே நியாயம் நீதியை நிலை நாட்ட வேண்டிய நிலையில் இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளது என்பதை நிரூபித்து உள்ளோம்.
தமிழக மீனவர்கள் கைது தொடர்பான கேள்விக்கு “இதுகுறித்து தமிழ்நாடு பாண்டிச்சேரி மொத்தம் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பேசியுள்ளோம். நிரந்தரமாக தீர்வுகள் காண வேண்டும் என்றால் இந்திய அளவில் ஒரு அதிகாரிகளை நியமித்து கண்காணித்து கைது நடவடிக்கைகளை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு நிபந்தனை கொடுத்துள்ளோம். மேலும் திமுக அரசு மக்களுக்கான திட்டங்களை செய்து வருகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்கள் மத்தியில் நல்ல பெயர் வாங்கி வருகிறார்.
எனவே எதிர் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் திமுக கூட்டணி தான் ஜெயிக்கும். முதல்வர் ஸ்டாலின்தான் மீண்டும் முதல்வர் ஆவார். மத்திய கல்வி கொள்கையை நாங்கள் ஏற்க தயாராக இல்லை. இரு மொழி கொள்கை தான் தமிழ்நாட்டில் நிலைக்கும். அதுதான் எங்களுடைய நிலைப்பாடு” என அவர் கூறினார்.


