தஞ்சாவூர், செப்டம்பர் 5 –
பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு முறை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் கோவி. செழியன் உத்தரவிட்டார். தஞ்சாவூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தூய்மை பணியாளர்க ளுக்கான நல குழு ஆய்வு கூட்டம், ஆதிதிராவிடர் விழிக்கண் மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம், ஆதி திராவிட நலக்குழு கூட்டம், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினருக்கான துணைத்திட்டம் மற்றும் பற்றாளர் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் முன்னிலை வைத்தார். கூட்டத்தில் அமைச்சர் கோவி. செழியன் பேசுகையில்: தூய்மை பணியாளர்களுக்கான இஎஸ்ஐ, பிஎப் தொடர்பான விரயங்களை தனிநபர் வாரியான விவரங்களை தயார் செய்ய வேண்டும்.
தொழிலாளர் காப்பீடு நிறுவன மருத்துவமனைகளில் இஎஸ்ஐ அட்டை மூலம் சிகிச்சை பெற ஏதுவாக ஒப்பந்ததாரர் வாயிலாக அடையாள அட்டையை வருகிற 15-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.
மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான துணைத்திட்டத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்காக ஒதுக்கப்படும் நீதி முழுமையாக சென்றடைவது அனைத்து துறையினரும் உறுதி செய்ய வேண்டும். பற்றாளர் கூட்டத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு முறை முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.
கூட்டத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு கூடுதல் நிவாரணம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு வேலையும், தாட்கோ மூலம் தூய்மை பணியாளர் நலவாரிய அட்டை 5 பயனாளிக்கும், பழங்குடியினர் நலத்துறை சார்பில் பழங்குடியினர் நல வாரிய அட்டை 7 பயனாளிகளுக்கும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜா ராம், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ரவிச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர்கள் கண்ணன் (தஞ்சாவூர்), காந்தி ராஜ் (கும்பகோணம்) மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



