மார்த்தாண்டம், மே 19 –
பளுகல் அருகே மணிவிளை பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (44). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி விஷ்ணுபிரியா (31). கேரளா மாநிலம் நெய்யாற்றின் கரையில் உள்ள வங்கியில் வேலை செய்து வருகிறார். சதீஷ்குமார் கடந்த மாதத்தில் சொந்த ஊருக்கு விடுமுறைக்காக வந்துள்ளார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததால் விஷ்ணு பிரியா நெய்யாற்றின் கரையில் உள்ள அவரது அண்ணன் வீட்டிற்கு குழந்தையுடன் சென்று தங்கி உள்ளார்.
இதில் மன உளைச்சலில் இருந்த சதீஷ்குமார் மனைவியிடம் சேர்ந்து வாழலாம் என கூறி அழைத்துள்ளார். ஆனால் அதற்கு விஷ்ணுபிரியா மறுப்பு தெரிவித்துள்ளார். சம்பவ தினத்தன்று பிரியா அவரது அண்ணனுடன் சேர்ந்து மணிவிளையில் உள்ள கணவர் வீட்டிற்கு பொருட்களை எடுப்பதற்காக சென்று உள்ளார்.
அங்கு வீடு பூட்டிய நிலையில் கிடந்ததால் சதீஷ்குமாருக்கு போன் செய்தபோது போன் எடுக்கவில்லை. பின்னர் அங்கு வந்த சதீஷ்குமாரின் தாய் கதவை திறக்க முற்பட்ட போது கதவு உள்ளே பூட்டப்பட்டிருந்தது. உடனே விஷ்ணு பிரியாவை அழைத்து வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பார்த்தனர். அப்போது அறைக்குள் சதீஷ்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
உடனடி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து விஷ்ணுபிரியா பளுகல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


