விழுப்புரம், செப்டம்பர் 11 –
விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டத்திற்குட்பட்ட கராசானூர் ஊராட்சியில் மெயின் ரோடு மற்றும் கங்கையம்மன் கோவில் தெருவில் பிரதம மந்திரி குடியிருப்பு வீடுகள் கட்டும் திட்டத்தின்கீழ் ரூ.2.40 இலட்சம் மதிப்பீட்டில் பயனாளிகள் வீடு கட்டி வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதனை தொடர்ந்து வி. பரங்கினி ஊராட்சியில் பிரதம மந்திரி குடியிருப்பு வீடுகள் கட்டும் திட்டத்தின்கீழ் ரூ.2.40 இலட்சம் மதிப்பீட்டில் பயனாளிகள் வீடு கட்டி வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதுடன் கட்டப்பட்டு வரும் குடியிருப்பு வீடுகளின் கட்டுமானப்பணிகளின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டதுடன் வீடுகள் கட்டுவதற்கு பணி ஆணை வழங்கப்பட்டு பணிகள் தொடங்கப்படாதவர்கள் விரைவில் வீடு கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் நிலுவையில் உள்ள கட்டுமானப்பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஒன்றிய பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து வி.பரங்கினி ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுடன் மாணவ, மாணவியர்களின் கல்வி முன்னேற்றம் குறித்தும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களின் கற்றல் திறன் குறித்தும் கணினியில் கணிதம் காரணிப்படுத்தும் முறை தொடர்பாக கேட்டறியப்பட்டது. மேலும், 05 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்பறையில் எண்ணும் எழுத்தும், திறன் சார்ந்த பயிற்சிகள் கற்றல் முறைகள் குறித்து கேட்டறியப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
ஆய்வின்போது உதவி ஆட்சியர் (பயிற்சி) ரா. வெங்கடேஷ்வரன், வானூர் ஒன்றிய குழு தலைவர் ஊஷா முரளி, வானூர் வருவாய் வட்டாட்சியர் வித்யாதரன், வானூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிவண்ணன், உதவி பொறியாளர் மகேந்திரன், மாவட்ட கல்வி அலுவலர் சேகர் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



