பூதப்பாண்டி, ஜுலை 23 –
கீரிப்பாறையை அடுத்துள்ள பரளியாறு கூப்பு ஒன்று பகுதியில் சுமார் 180 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். அவர்கள் பெரும்பாலும் அரசு மற்றும் தனியார் ரப்பர் தோட்டங்களில் பால் வெட்டும் தொழில் செய்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று காலை 7.00 மணியளவில் அந்த பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவருடைய மனைவி லதா ரப்பர் பால் வெட்டுவதற்காக வீட்டிலிருந்து கிளம்பி போகும் போது வழியில் இருந்த பாறையில் ஒரு புலி இருப்பதை கண்டு பதறி கூச்சலிட்டுள்ளார்.
இந்த சத்தத்திலும் புலி அசைவற்றே படுத்து கிடந்தது. உடனே இவர் சுதாரித்து கொண்டு மற்ற தொழிலாளிகளுடன் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் உடனே சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து பட்டாசுகள் வெடித்து புலியினை அங்கிருந்து விரட்டி விட்டனர். இருந்தாலும் பால் வெட்டும் தொழிலாளர்கள் அச்சத்துடனே பணிக்கு சென்றனர்.