தஞ்சாவூர், டிசம்பர் 6 –
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூபாய் 35,000 நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், பயிர் பாதிப்பை செயலியில் பதிவு செய்ய விவசாயிகள் எதிர்ப்பு. விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாவட்டத்தில் மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகத்துக்கு துணை போகும் காவிரி ஆணையம் மத்திய அரசை கண்டித்தும் கர்நாடக அரசுக்கு மத்திய அரசு துணை போகக் கூடாது என வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பியவாறு விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். சுமார் 15 நிமிடங்கள் கழித்து விவசாயிகள் மீண்டும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதற்கிடையே கலெக்டர் உள்ளிட்ட அலுவலர்கள் அமர்ந்த மேடை முன் விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில துணைத் தலைவர் கக்கரை சுகுமாரன் தலைமையில் விவசாயிகள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களில் ஒருவர் தலைகீழாக நிற்க முயற்சி செய்தார். இவரை காவல்துறை தடுத்து நிறுத்தியதால் அந்தமுயற்சி கைவிடப்பட்டது.
இதுகுறித்து கக்கரை சுகுமாரன் பேசுகையில்: மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து வேளாண் அலுவலர், கிராம நிர்வாக அலுவலர் நேரில் சென்று செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. பாதிக்கப்பட்ட பரப்பளவு அதிகமாக உள்ள நிலையில் அனைத்தையும் எப்படி பதிவு செய்ய முடியும் மேலும் கணக்கெடுப்பை குறைத்து எடுக்கு மாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அரசுக்கு அவப் பெயர் ஏற்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் செயல்படுகிறது.
கலெக்டர் : பயிர் பாதிப்பு விவரங்களை செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி மாநில அரசு செய்கிறது. அவ்வாறு செய்தால்தான் விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கும். குறைத்து கணக்கெடுப்பு செய்யுமாறு மாவட்ட நிர்வாகம் எதுவும் கூறவில்லை. தவறான தகவல்களை கூற வேண்டாம். இதையடுத்து கக்கரை சுகுமாரன் தலைமை விவசாயிகள் முழக்கங்கள் எழுப்பியவாறு வெளிநடப்பு செய்தனர்.
சுவாமிமலை சுந்தர விமல் நாதன்: கும்பகோணம் அருகே சோழபுரம், மானம்பாடி உள்ளிட்ட கிராமங்களில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டதால் மழை நீர் வடிந்து செல்வதற்கு வழி இல்லாமல் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
கலெக்டர்: இனிமேல் நெடுஞ்சாலைத் துறை யினர் சாலை அமைக்கும்போது வாய்க்கால்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு நீர் வளத்துறையிடம் தடையில்லா சான்று பெற வேண்டும்.
ராய முண்டான்பட்டி ஜீவாகுமார்: சித்திரக்குடி பூதரயநல்லூர் விண்ணமங்கலம் கொளத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து இன்னும் கணக்கெடுப்பு செய்ய அலுவலர்கள் வரவில்லை. அம்மையகரம் ரவிச்சந்தர் கணக்கெடுப்பு பணி இன்னும் எங்குமே தொடங்கவில்லை இப்பணி விரைவாக தொடங்க வேண்டும். திருவோணம் சின்னத்துரை மாவட்டத்தில் எவ்வளவு ஏக்கரில் பயிர்கள் மூழ்கியுள்ளன? எவ்வளவு ஏக்கரில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன? விரைவாக நிவாரணம் பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேளாண் இணை இயக்குனர் வித்யா: மாவட்டத்தில் 13,000 ஏக்கரில் பயிர்கள் மூழ்கியுள்ளன. தண்ணீர் வடிந்த பிறகு 33 சதவீதத்துக்கும் அதிகமான பாதிப்பு ஏற்பட்ட வயல் களில் களப்பணியாளர்கள் கணக்கெடுப்பு செய்து நிவாரணம் பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும்.



