கன்னியாகுமரி, செப்.18.
கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் ஆத்திக்காட்டுவிளையைச் சேர்ந்த செல்வி (50) என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவருடன் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அறை எடுத்து தங்கியிருந்த நிலையில், மாலை 3 மணியளவில் அவர் மட்டும் பதற்றத்துடன் வெளியே சென்றுள்ளார். இதனால் சந்தேகமடைந்த லாட்ஜ் ஊழியர்கள் அறையை திறந்து பார்த்தபோது, செல்வி படுக்கையில் இறந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கன்னியாகுமரி போலீசார் நடத்திய சோதனையில், தலையணையால் முகத்தை அழுத்தி மூச்சுத்திணறடித்து செல்வி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், அவர் அணிந்திருந்த கம்மல்கள் காணாமல் போனதும் தெரியவந்தது. இதையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து லாட்ஜில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, செல்வியுடன் தங்கியிருந்த நபரை போலீசார் அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர். விசாரணையில் அவர் ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரத்தைச் சேர்ந்த செல்வராஜ் (31) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
போலீசாரிடம் செல்வராஜ் அளித்ததாக கூறப்படும் வாக்குமூலத்தில், தான் சென்னையில் டாக்ஸி ஓட்டி வருவதாகவும், கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தபோது வடசேரி பேருந்து நிலையத்தில் செல்வி அறிமுகமானதாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் அவரை அழைத்துக்கொண்டு கன்னியாகுமரிக்கு வந்து லாட்ஜில் அறை எடுத்து தங்கியதாகவும் கூறியுள்ளார்.
தான் குளித்துவிட்டு வந்தபோது தன்னிடம் இருந்த ரூ.20 ஆயிரத்தை செல்வி எடுத்ததாகவும், பணத்தை திருப்பிக் கேட்டு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அப்போது ஆத்திரத்தில் செல்வியை கீழே தள்ளி தலையணையால் முகத்தை அழுத்தியதாகவும், அவர் மயக்கமடைந்த பின்னர் கம்மல்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் கூறியுள்ளார். போலீசார் கைது செய்த பின்னரே செல்வி உயிரிழந்தது தனக்கு தெரியவந்ததாகவும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து செல்வராஜை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், பின்னர் சிறையில் அடைத்தனர்.



