குளச்சல், ஜன. 22 –
நாகர்கோவில் – திருவனந்தபுரம் இடையே இரட்டை இருப்புப் பாதை பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது பாலம் எண் 262 நுள்ளிவிளையில் நடைபெற இருப்பதால் பழைய பாலம் உடைக்கப்பட்டு புதிய பாலம் கட்டும் பணி வருகின்ற ஜனவரி 26ம் தேதி திங்கள்கிழமை முதல் தொடங்க இருப்பதால் தோட்டியோடு – இரணியல் மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தோட்டியோட்டில் இருந்து திங்கள் நகருக்கு செல்ல வேண்டிய குறிப்பிட்ட அரசு பேருந்துகள் மற்றும் பள்ளி, கல்லூரி வாகனங்கள் பரசேரி வழியாக கொன்னக்குழிவிளை நான்கு வழி சாலை சென்று பேயன்குழி ஆற்று பாலம் வழியாக பேயன்குழி பாலம் சந்திப்பு வந்து செல்லலாம். மற்றும் அனைத்து கனரக வாகனங்களும் தோட்டியோடு, தக்கலை வழியாக இரணியல் சென்று திங்கள்நகருக்கு செல்ல வேண்டும்.
அதைப்போல திங்கள் நகரில் இருந்து நாகர்கோவிலுக்கு வரும் குறிப்பிட்ட அரசு பேருந்துகள் மற்றும் பள்ளி கல்லூரி வாகனங்கள் பேயன்குழி ஆற்றுப்பாலம் வழியாக நான்கு வழி சாலை வந்து கொன்னக்குழிவிளையில் இடது பக்கம் திரும்பி வில்லுக்குறி பாலம் சந்திப்பு வழியாக நாகர்கோவிலுக்கு செல்லலாம். மற்ற அனைத்து வாகனங்களும் மடவிளாகம் வழியாக குருந்தன்கோடு, பேயோடு வழியாக நாகர்கோவிலுக்கு செல்லலாம் அல்லது இரணியல் வழியாக தக்கலை சென்றடைந்து நாகர்கோவிலுக்கு செல்லலாம்.
ஆறுசக்கரத்திற்கு மேலான எல்லா விதமான கனரக வாகனங்களும் பேயன்குழி ஆற்றுப்பாலத்தில் செல்வதை தவிர்த்து இரணியல், தக்கலை பாதையையோ அல்லது மடவிளாகம், குருந்தன்கோடு பாதையை பயன்படுத்த குளச்சல் போக்குவரத்து காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.


