நாகர்கோவில், செப்டம்பர் 30 –
நாகர்கோவில் சிறையில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 2 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்றுள்ளனர்.
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் அருகே மாவட்ட சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு கொலை வழக்கு கைதிகள் உட்பட பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் கைதான கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். வெளி மாவட்ட கைதிகளும் உள்ளனர். இந்த சிறையில் உள்ள கைதிகள் இடையே சமீப காலமாக தகராறு நடந்து வருவதாக கூறப்படுகிறது. அவர்கள் அடிக்கடி சிறை நடவடிக்கைகளுக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு உள்ளதாகவும் குறிப்பிடுகிறது. இது தொடர்பாக பலமுறை எச்சரித்தும் மோதல் போக்கை நிறுத்தவில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரண்டு தரப்பினர் இடையே பிரச்னை ஏற்பட்டு அடிதடி வரை சென்று இருக்கிறது. இது தொடர்பாக தற்போது சிறை அலுவலர் சம்பத் நேசமணி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் 13 பேர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து உள்ளனர். இதில் பேச்சியப்பன் மற்றும் முத்துராஜ் ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்து இருக்கின்றனர். உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறையில் ஏற்பட்ட இந்த மோதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


