நாகர்கோவில், ஆகஸ்டு 8 –
சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் 1993-ல் நடந்த பயங்கரவாத குண்டு வெடிப்பில் இந்து முன்னணி அமைப்பின் இணை அமைப்பாளராக இருந்த குமரி பாலன் இறந்தார். இவரின் நினைவிடம் தக்கலை அருகே பிரம்மபுரத்தில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் குமரி பாலனின் நினைவு தினம் பயங்கரவாத எதிர்ப்பு தினமாக இந்து முன்னணி சார்பில் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த வகையில் நேற்று காலை குமரி மாவட்ட இந்து முன்னணி சார்பில் பயங்கரவாத எதிர்ப்பு தின பைக் ஊர்வலம் நடந்தது. நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் இருந்து தொடங்கிய பைக் ஊர்வலம், குமரி பாலன் நினைவிடத்திற்கு சென்றது.
நாகர்கோவில் நாகராஜா கோயில் திடலில் இருந்து பைக் ஊர்வலத்தை பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட பொருளாளர் முத்துராமன் தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ பங்கேற்றார். ஊர்வலத்திற்கு இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் ஜெயராம் தலைமை வகித்தார்.
இதில் பாஜக நிர்வாகிகள் மீனாதேவ், தேவ், அஜித், கவுன்சிலர்கள் சுனில் குமார், ஐயப்பன், ரோஷிதா, விசுவ இந்து பரிசத் நிர்வாகிகள் காளியப்பன், நாஞ்சில் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். ஊர்வலம் பிரம்மபுரத்தை அடைந்ததும் நினைவிடத்தில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக ஊர்வலம் தொடங்குவதற்கு முன் அனைவரும் பயங்கரவாத எதிர்ப்பு தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.



