நாகர்கோவில், மே 30 –
நாகர்கோவில் வழியாக மதுரையில் இருந்து கேரள மாநிலம் புனலூருக்கு தினமும் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று இரவு ரயில் மதுரையில் இருந்து புறப்பட்டபோது, பயணிகள் அதிக அளவில் பயணம் செய்தனர். முன்பதிவு இல்லாத பெட்டிகளில் அதிக பயணிகள் இருந்ததால் சிலர் படிக்கட்டுகளிலும் அமர்ந்து பயணம் செய்துள்ளனர்.
ரயில் இன்று அதிகாலை 2 40 மணி அளவில் நாங்குநேரி நிலையம் வந்தது. அங்கு பயணிகள் ஏறி இறங்கிய பின் ரயில் புறப்பட்டது. மறுகால்குறிச்சி பகுதியில் ரெயில் வந்த போது அதில் பயணம் செய்த ஒருவர் எதிர்பாராத விதமாக ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதனை கண்டு சக பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அபாய கூச்சல் விட்டனர். ஆனால் ரயில் நிற்காமல் சென்று கொண்டு இருந்தது.
இது தொடர்பாக சிலர் ரயில்வே போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அதிகாலை நேரத்திலும் நாகர்கோவில் ரயில்வே போலீசார் விரைந்து சென்று அவர்கள் வள்ளியூர் முதல் நாங்குநேரி வரையில் தண்டவாளப் பகுதியில் பார்வையிட்டனர். அப்போது ஒரு இடத்தில் ரயிலில் இருந்து தவறி விழுந்தவர் காயத்துடன் கிடப்பது தெரிய வந்தது. அவரை ரயில்வே போலீசார் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விசாரணையில் அவரது பெயர் சாபு (55) என்பதும், அவர் கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை பகுதியை சேர்ந்த தொழிலாளி என்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


