மார்த்தாண்டம், ஜூன் 20 –
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின்படி, தக்கலை உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பார்த்திபன் மேற்பார்வையில் போக்குவரத்து ஒழுங்குப் பிரிவு உதவி ஆய்வாளர் சிதம்பர தாணு தலைமையிலான போக்குவரத்து போலீசார் மற்றும் சாலை பாதுகாப்பு கிளப் மாணவ, மாணவியர்களுடன் இணைந்து பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இன்று நட்டாலம் அரசு பள்ளி முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றுவதன் அவசியம், தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவதின் முக்கியத்துவம், அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்துகள், மது அருந்தி வாகனம் இயக்குவதால் ஏற்படும் விபத்துகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
சாலை விதிகளை மதித்து செயல்பட்டால் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை பெருமளவில் தடுக்க முடியும் என்பதையும் மாணவர்கள் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர். இளம் தலைமுறையினரிடையே போக்குவரத்து ஒழுங்கு மற்றும் பொறுப்புணர்வை வளர்க்கும் வகையில் இந்த விழிப்புணர்வு நடவடிக்கை அமைந்தது.
மாணவர்கள் நேரடியாக சமூக விழிப்புணர்வு பணிகளில் பங்கேற்பது, எதிர்காலத்தில் போக்குவரத்து விதிகளை மதிக்கும் பொறுப்பான சமுதாயத்தை உருவாக்குவதற்கான முக்கியமான முன்னெடுப்பாகும். காவல்துறை மற்றும் மாணவர்கள் இணைந்து மேற்கொண்ட இந்த நிகழ்ச்சியை பொதுமக்கள் பாராட்டினர்.



