தேனி, ஜூலை 14 –
தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் இன்று (14.07.2026) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் மூலம் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் மருத்துவக் கட்டிடங்களை திறந்து வைத்து, மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் வட்டம், பூதிப்புரம் பேரூராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் மருத்துவமனை கட்டிடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளிக்காட்சி மூலம் திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்விழாவையொட்டி, பூதிப்புரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் உள்ள புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் மருத்துவமனை கட்டிடத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.வைத்திநாதன் குத்துவிளக்கேற்றி வைத்து பார்வையிட்டார். பின்னர், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று மருத்துவப் பரிசோதனை மையம், மருந்தகப் பிரிவு, ஆய்வகம் உள்ளிட்ட பல்வேறுப் பிரிவுகளை பார்வையிட்டதுடன், அங்கிருந்த பொதுமக்களிடம் சிகிச்சை வழங்கப்படும் விவரம் குறித்தும், கோரிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, 10 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்களை வழங்கியதுடன், ஊட்டச்சத்து உணவுகளை முறையாக உட்கொண்டு ஒவ்வொருவரும் உடல் ஆரோக்கியத்துடன் இருந்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார். மேலும், ஆரம்ப சுகாதார நிலையத்தில் பராமரிக்கப்படும் கர்ப்பிணித் தாய்மார்கள் பதிவேடுகளைப் பார்வையிட்டு, அதிலுள்ள தொலைப்பேசி எண்ணிற்கு தொடர்புகொண்டு கர்ப்பிணிப் பெண்ணிடம், மருத்துவப் பரிசோதனைகளை முறையாக மேற்கொள்ளுமாறும், மருத்துவரின் ஆலோசனைப்படி ஊட்டச்சத்து உணவுகளை உட்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.வைத்திநாதன் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.வரதராஜன், நிலைய மருத்துவ அலுவலர் மரு.தண்டபாணி, பேரூராட்சி மன்றத்தலைவர் கவியரசு, செயல் அலுவலர் ராஜேஷ் மற்றும் அரசு அலுவலர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



