தென்தாமரைகுளம், ஜூலை 1 –
கன்னியாகுமரி பகுதியில் உள்ள தனியார் சி.பி.எஸ்.இ பள்ளியில் படிக்கும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் மற்றும் அங்கு பணிபுரியும் ஆசிரியர்களை பள்ளிக்கு அழைத்து வருவதற்காக பள்ளி நிர்வாகம் சார்பாக வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி நேற்று அந்தப் பள்ளிக்கு சொந்தமான பள்ளி வாகனம் ஒன்று மணக்குடி பகுதியில் இருந்து மாணவ, மாணவிகளை ஏற்றி கொண்டு கன்னியாகுமரி நோக்கி வந்து கொண்டிருந்தது. அப் போது தென்தாமரைகுளம் அருகே உள்ள கோவில்விளை பகுதியில் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த அரசு பஸ்சின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பள்ளி வாகனத்தில் மாணவ, மாணவியர்கள், டிரைவர் உட்பட 34 பேர் பயணித்த நிலையில் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் அனைவரும் உயிர் தப்பினர். பள்ளி வாகனம் முன்பகுதி முற்றிலும் சேதம் அடைந்தது.
இந்த விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக வாகனத்துக்குள் சிக்கிய பள்ளி மாணவ மாணவிகளை மீட்டு கொட்டாரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தென்தாமரைகுளம் போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும் இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. முற்றிலும் சேதமடைந்த பள்ளி வாகனத்தை மீட்பு வாகனத்தைக் கொண்டு வந்து தென்தாமரை குளம் போலீசார் அப்புறப்படுத்தினர்.


