தென்தாமரைகுளம், ஜூலை 13 –
தென்தாமரைகுளம் அருகே உள்ள அண்டிவிளை சந்திப்பில் தென் தாமரைகுளம் சப்-இன்ஸ்பெக்டர் பிரைட் பிளசிங் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சாக்குபையில் மறைத்து வைத்து பொதுமக்களுக்கு ஒருவர் மதுபாட்டில் விற்பனை செய்து கொண்டிருந்தார்.
உடனே அவரை பிடித்து விசாரித்த போது தெங்கம்புதூர் பகுதியை சேர்ந்த பெயின்டரான கண்ணன் (45) என்பது தெரிந்தது. மேலும் அவர் கையில் இருந்த சாக்குப் பையை சோதனை செய்த போது அதில் 26 மது பாட்டில்களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்ததும் தெரிந்தது. உடனே அவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்த போது அவர்மீது நாகர்கோவில், சுசீந்திரம், கோட்டார் ஆகிய காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சீதப்பால் அருகே தாழக்குடி அனந்தபத்மநாபபுரம், யாதவர் நடுத்தெரு பகுதியை சார்ந்த ஒளவையார் என்பவர் மகன் பாடலிங்கம் என்ற துரை (50). இவர் அரசு அனுமதியின்றி மதுபாட்டிலை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் ஆரல்வாய்மொழி உதவி ஆய்வாளர் அனுஜன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதிக விலைக்கு மதுபாட்டிலை விற்பனை செய்து கொண்டிருந்த பாடலிங்கம் என்ற துரையை கைது செய்து அவரிடமிருந்து 26 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.


